வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. இது தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இலங்கையை நோக்கி நகரும்போது தமிகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 4 செ.மீட்டரும், குடவாசலில் 3 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment