''மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கூடுதலாக மாணவர்களை சேர்க்க மேலும் 95 இடங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்'' என புதிய டீன் எம்.ஆர். வைரமுத்துராஜா தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்தவர் ரேவதி கயிலைராஜன். சமீபத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இவர் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்த எம்.ஆர். வைரமுத்து ராஜா நியமிக்கப்பட்டார்.
உயரதிகாரிகள் ஆலோசனைப்படி இவர் நேற்று முன்தினமே அவசர அவசரமாக மதுரை வந்து பொறு ப்பேற்றுக் கொண்டார். நேற்று மருத்து வமனை அதிகாரிகள், மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின், டீன் எம்.ஆர். வைர முத்துராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையைக் காட்டிலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் நோயாளிகள் அதிகளவு சிகிச்சைக்கு வருகின்றனர்.
8 தென் மாவட்டங்கள், கேரளா மாநிலம் இடுக்கி உள்ளிட்ட அம்மாநில மக்களும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளன. 95 இடங்கள் அதிகரித்து, மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பல் மருத்துவக் கல்லூரி அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பல் மருத்துவக்கல்லூரியை, மதுரையில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்காக 3 இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளோம்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் எல்லா துறைகளிலும் கொண்டு வரப்படும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் நடுத்தர, ஏழை மக்களுக்கு உயர் சிகிச்சைகள் கிடைக்கத் தேவையான நிதி, மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அன்று மாணவர், இன்று டீன்
டீன் எம்.ஆர். வைரமுத்துராஜா மேலும் கூறுகையில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 1976-ம் ஆண்டு முதல் 82-ம் ஆண்டு வரை எம்.பி.பி.எஸ். படித்தேன். 88-ம் ஆண்டு முதல் 90-ம் ஆண்டு வரை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவம் படித்தேன். மாணவராக எம்.டி. படித்த இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, இன்று நான் டீனாக பொறுப்பேற்றுள்ளது பெருமையாக உள்ளது. ஒரு மாணவராக நான் படித்த இந்த கல்லூரி மருத்துவமனையை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.?
No comments:
Post a Comment