அரசுப் பள்ளி ஆசிரியரால் துயர் நீங்கிய கிராமம்: தற்கொலை எண்ணத்திலிருந்து தன்னம்பிக்கை பெற்ற மக்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 29, 2015

அரசுப் பள்ளி ஆசிரியரால் துயர் நீங்கிய கிராமம்: தற்கொலை எண்ணத்திலிருந்து தன்னம்பிக்கை பெற்ற மக்கள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி மேற்கு கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புவரை, மாதம் ஒருவர் பூச்சி மருந்து குடித்தும், தூக்கிட்டும், மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக்கொண்டும் தற்கொலை செய்துகொண்டனர். பல்வேறு காரணங்களால் மக்கள் எடுத்து வந்த இந்த தவறான முடிவை மாற்றி, பொதுமக்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த்.

காளாச்சேரி மேற்கு கிராமத்தில் வசிக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி மாற்றத்தை உருவாக்கியது குறித்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஆனந்த் (30) விவரிக்கிறார்: நான் இந்தப் பள்ளியில், 2012-ல் பணிக்குச் சேர்ந்தேன். சின்னச் சின்ன காரணங்களால் பல மாணவர்களின் தாய் அல்லது தந்தை தற்கொலை செய்துகொண் டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த நிலையில், பள்ளியில் முதன் முதலாக ஆண்டு விழா நடத்த திட்டமிட்டு அதன்படி நடைபெற்ற விழாவில் மாணவர்களை வைத்து ஒரு நாடகத்தை நடத்தினோம்.

தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்டுவிடவே வேறு வழி யில்லாத மகன் பிச்சை எடுப்பதாக ஒரு காட்சியை அந்த நாடகத்தில் வைத்திருந்தோம். மறுநாள் ஊர் பெரியவர்கள் பள்ளிக்கு வந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக நாடகம் நடத்தியதற்காக என்னை யும் சக ஆசிரியர்களையும், மாண வர்களையும் பாராட்டினர். இந்த பாராட்டு எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

பின்னர் அந்த ஊரில் உள்ள இளைஞர்களுடன் பேசி, தற் கொலைகளைத் தவிர்க்க தன்னம் பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டோம். ஊரில் தற்கொலை செய்துகொண்டவர்கள் குறித்த விவரத்தைச் சேகரித்தோம். அடுத்த ஓரிரு மாதங்களில் வீதி நாடகம் ஒன்றை அரங்கேற்றினோம். தற் கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலை அதில் வாசித்தபோது ஊர் மக்கள் மலைத்துப் போயினர்.

இதைத்தொடர்ந்து விடுமுறை நாட்களில் வீடுவீடாகச் சென்று, ‘தற்கொலையும், அதன்பிறகு ஏற் படும் பிரச்சினைகளும்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு பேசி மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்தோம்.

இப்போது, இந்த ஊரில் கடந்த 3 ஆண்டுகளாக எவரும் தவறான முடிவுக்கு வர வில்லை. இந்த மாற்றத்துக்கு இங் குள்ள மாணவர்கள்தான் முதல் காரணம் என்று அவர் கூறினார்.

பள்ளி மாணவர்களிடம் கேட்ட போது, “ஆனந்த் சாருடன் வீடு வீடாகச் சென்று நாங்கள் விழிப் புணர்வையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தினோம். இது குறித்து ஒரு ப்ராஜெக்ட் தயா ரித்து, அதை தமிழக அரசுக்கு அனுப்பினோம். அரசு, ‘ஐ கேன்’ விருதுக்குப் பரிந்துரைத்தது. 2013-ல் குஜராத்தில் இந்த விருது எங்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2014-ல் 2 விருதுகள், 2015-ல் ஒரு விருது என தொடர்ந்து 3 ஆண்டுகளில் 4 விருதுகளை நாங்கள் பெற்றோம்.

வரும் டிசம்பர் 2-ம் தேதி குஜராத் மாநிலத்தில் குழந்தை கள் அறக்கட்டளை சார்பில் நடைபெறவுள்ள கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள உள்ளோம்” என்றனர்.

இப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை தன்னலமற்ற சேவையாளர்கள் எனத் தேர்வு செய்துள்ள நடிகர் லாரன்சின் ‘அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை’ ரூ.1 லட்சம் பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிதியைக்கொண்டு கொரடாச்சேரி அரசு மகளிர் பள்ளிக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் நாப்கின் எரியூட்டும் இயந்திரம், மேலராதாநல்லூர் பள்ளிக்கு சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் ஆகியவற்றை வாங்கித் தந்துள்ளதாக ஆசிரியர் ஆனந்த் தெரிவித்தார்.

ஆசிரியர் ஆனந்த்

No comments:

Post a Comment