தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினிக் கல்வி கற்றுத் தரப்படுவதில்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 27, 2025

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினிக் கல்வி கற்றுத் தரப்படுவதில்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு..

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினிக் கல்வி கற்றுத் தரப்படுவதில்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு..

சென்னை: தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கணினிக் கல்வி கற்றுத் தரப்படுவதில்லை. கணினி அறிவியல் என்ற பாடத் திட்டமே வகுக்கப்படவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்வியே சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலும் என்பதா
ல், அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் கல்வி அறிவைப் பெறும் வகையிலான திட்டங்கள் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு. விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரேயான்ஸ் மற்றும் வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடப் புத்தகங்கள், மிதி வண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது பாடப் புத்தகங்களே தாமதமாக கிடைக்கக்கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.


இந்த நாட்டின் எதிர்காலத் தூண்களாகிய மாணவ, மாணவியருக்கு கணினி வழிக் கல்வி முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இந்தத் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், ஒவ்வொரு பள்ளியிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை அமைத்து, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கணினிக் கல்வியைக் கற்றுத் தருவதாகும்

இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசால் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், இதனைப் பராமரிக்க ஆண்டுதோறும் நிதி  ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இருப்பினும், தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கணினிக் கல்வி கற்றுத் தரப்படுவதில்லை என்றும், கணினி அறிவியல் என்ற பாடத் திட்டமே வகுக்கப்படவில்லை என்றும், இந்த ஆய்வகம் எமிஸ் உள்ளிட்ட அலுவலகப் பணிகள் மற்றும் வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் கணினிக் கல்வி பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.


மத்திய அரசு Samagra  Shiksha ICT திட்டத்தில்14663 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு நிதி தருகின்றது..

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 6,454 பேர், நடுநிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 8,209 பேர்என மொத்தம் மொத்தம் 14,663 கணினி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக நிதியை பெற்றுள்ள  தமிழக அரசு, அந்தத் திட்டத்தை முழுமையாக  செயல்படுத்தவில்லை. கணினி ஆய்வக பயிற்றுனர்களாக கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தில் பணியாற்றியவர்களில் 8200 பேரை தேர்வு செய்து  தமிழக  அரசு நியமித்துள்ளது. இது மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது.


ஹைடெக் ஆய்வக பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்ட அவர்களை அந்தப் பணியில் ஈடுபடுத்தாமல் எமிஸ் (Educational Management Information System - EMIS) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்துகின்றனர். அதனால், உயர் ஆய்வுக் கூடங்கள் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டனவோ, அந்த நோக்கமே சிதைந்து விட்டது. எனவே, உயர் ஆய்வுக் கூடங்களின் பயிற்றுனர்களாக  கணினி அறிவியல் பட்டத்துடன், பிஎட் பட்டமும் படித்து வேலைவாய்ப்பின்றி வாடும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனி பாடமாக கொண்டு வர வேண்டும்; அவற்றுக்கு தனி பாட வேளைகளை ஒதுக்க வேண்டும் .

14,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கணினிக் கல்வி கற்பிக்க வேண்டுமென்ற நிலையில், கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் பட்டம் பெறாத 1,200 கணினி ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக அடிப்படையில் தி.மு.க. அரசு நியமித்துள்ளது என்றால், இந்தத் திட்டம் பெயருக்காக செயல்படுத்தப்படுகிறது என்றுதான் பொருள். அதே சமயத்தில், மத்திய கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதலே கற்றுத் தரப்படுகிறது.
மத்திய அரசின் நிதியைப் பெற்றுக் கொண்டு, அதற்கான பாடத் திட்டத்தை வகுக்காமல் இருப்பதும், ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல் என்பதோடு மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளுக்கு மடைமாற்றம் செய்யும் முயற்சியாகும். தி.மு.க. அரசின் இந்தச் செயல் ஏழையெளிய மாணவ மாணவியரின் எதிர்காலத்தை சிதைப்பதற்குச் சமம். இந்தத் திட்டத்தினை உரிய முறையில் தி.மு.க. அரசு நிறைவேற்றியிருந்தால், கிட்டத்தட்ட 14000 கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். இதையும் தி.மு.க. அரசு கெடுத்துவிட்டது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நிதிச் சீரழிவு, நீர் மேலாண்மை சீரழிவு என்ற வரிசையில் கல்விச் சீரழிவை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

அழியாச் செல்வமாம் கல்வியை ஏழையெளிய மாணவ, மாணவியர் பெற வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தி, இனி வருங்காலங்களிலாவது, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் கணினிக் கல்வியை கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்கள்மூலம் கற்பிக்க முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

https://www.kamadenu.in/news/tamilnadu/97044-computer-education-is-not-taught-from-class-6-to-10-in-tamil-nadu-ops-alleges.html

No comments:

Post a Comment