புதிய ஓய்வூதிய திட்டம் அமலாகும் வரை அடிப்படை ஊதியத்தில் 30% இடைக்கால நிவாரணம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 18, 2026

புதிய ஓய்வூதிய திட்டம் அமலாகும் வரை அடிப்படை ஊதியத்தில் 30% இடைக்கால நிவாரணம்

 புதிய ஓய்வூதிய திட்டம் அமலாகும் வரை அடிப்படை ஊதியத்தில் 30% இடைக்கால நிவாரணம்


டேப்ஸ்’ ஓய்வூதிய திட்ட இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை, கடந்த ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் - இதில் எது அதிகமோ அத்தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்கள் இறுதியாகப் பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீத தொகையுடன் நடைமுறையில் உள்ள அகவிலைப்படி சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும். பணிக்கொடை அதிகபட்சம் ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

இது தொடர்பான அரசாணை கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட்டது. டேப்ஸ் ஓய்வூதிய திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அதன்பிறகு இத்திட்டம் நிறைவேற்றப்படும் அரசு அறிவித்திருந்தது.

இந்தச் சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு கடந்த மே 10-ம் தேதி பொறுப்பேற்றது. தவெக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. எனவே, தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருந்து வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக எந்தவிதமான பிடித்தமும் செய்யப்படுவது இல்லை. ஆனால், டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய பலன்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் என்றாலும் ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அவர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு இணையான தொகையை அரசு தனது பங்காகச் செலுத்தும்.

டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிகள் மற்றும் கணக்கீட்டு நடைமுறைகள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதித் துறை செயர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக நிர்ணயிக்கும் பணிக்குச் சற்றுக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்.

எனவே, 1.1.2026-க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்கள் எவ்விதப் பொருளாதார பிரச்சினை இன்றி வாழ ஏதுவாக, அவர்களுக்கு இடைக்கால வாழ்வாதார ஆதரவுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டேப்ஸ் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை இது ஓர் இடைக்கால ஏற்பாடாக இருக்கும்.

இத்திட்டத்தின்படி, பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 30 சதவீதம்அல்லது ரூ.10,000 - இதில் எது அதிகமோ அத்தொகை இடைக்கால நிவாரணத் தொகையாக நிர்ணயிக்கப்படும். அதோடு சேர்த்து நடைமுறையில் இருக்கும் அகவிலைப்படியும் வழங்கப்படும்.

இந்த இடைக்கால நிவாரண திட்டம் 1.4.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு ரெகுலர் ஊதிய விகிதத்தில் (பணியமர்த்தப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இருந்தவர்கள். 1.1.2026 அன்று பணியில் நீடித்து, அதற்குப் பிறகு வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றவர்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த பணிக்காலத்தை நிறைவு செய்தவர்கள், பணியின்போது மரணமடைந்த அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டும் பொருந்தும். அதேநேரத்தில் 1.1.2026-க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியில் இருந்து விலகியவர்களுக்கும் பொருந்தாது.

ஓய்வூதியதாரர் மரணமடைந்தால் அவர் பெற்று வந்த இடைக்கால தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் அவரது வாழ்க்கை துணை, அவருக்கு பிறகு 25 வயதை எட்டாத மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள், வாழ்நாள் முழுவதும் சுயமாயக உழைத்து வாழ இயலாத அளவுக்குப் பார்வை குறைபாடு, மனநல பாதிப்பு, அறிவுசார் குறைபாடு அல்லது நடமாடும் திறன் குறைபாடு போன்ற உடல், மன ரீதியான மாற்றுத்திறனாளி குழந்தைகள், (வயது வரம்பு கிடையாது).

25 வயதைக் கடந்தும் திருமணமாகாத, விதவையான அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள் (அரசின் வருமான வரம்பு மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ்நாள் முழுவதும் தகுதியுடையவர்). திருமணமாகாத அரசு ஊழியர்களின் பெற்றோர், பெற்றோர் இல்லாவிட்டால், தங்களை முழுமையாகச் சார்ந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட உடன் பிறந்தவர்கள் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் கருத்து

டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்துக்கு தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் கூறும்போது, “இடைக்கால நிவாரணத்தொகை வழங்கும் தற்காலிக ஏற்பாடு வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே பெறும் கம்யூட்டேசன் தொகை குறித்தோ, பணிக்கொடை பற்றியோ அரசாணையில் எதுவும் குறிப்பிடாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தேர்தல் வாக்குறுதி அளித்தபடி தவெக அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைறைப்படுத்த வேண்டும். முந்தைய திமுக அரசு போல் 5 ஆண்டு காலத்துக்கு இழுத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் கூறுகையில், “டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்துக்கான முழு விதிமுறைகளையும் அரசு விரைந்து வெளியிட வேண்டும். தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment