தொடர் மழையால் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்தாகுமா?: கல்வித்துறை பரிசீலனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 20, 2015

தொடர் மழையால் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்தாகுமா?: கல்வித்துறை பரிசீலனை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. ஒரே நாளில் 34 செ.மீ., 43 செ.மீ. என்ற அளவில் மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது.இதனால் தீபாவளிக்கு அடுத்த நாள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டன. கடந்த 12–ந்தேதியில் இருந்து 22–ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட 11 நாட்களில் 7 நாட்கள் பள்ளிகள் வேலை நாட்களாகும். மற்ற நாட்கள் 4 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும். வேலை நாட்களாகிய 7 நாட்களைத்தான் எப்படி சரிகட்டலாம் என பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என தெரியவந்துள்ளது.இதற்கிடையில் பள்ளி, கல்லூரிகள் 23–ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர இடைத்தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கும் காலம். மழையால் அந்த தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. மாதாந்திர இடைத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது நேரிடையாக அரையாண்டுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.மேலும் மழையால் விடுமுறை விடப்பட்ட 7 வேலை நாட்களை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமைகளிலும் முழுமையாக பள்ளியை நடத்தி முடிக்க வேண்டிய பாடத்திட்டங்களை விரைந்து முடிக்கவும் திட்டமிடப்படுகிறது. 7 சனிக்கிழமைகளில் முழுவேலை நாட்களாக அறிவித்தாலும் 2 மாதங்கள் ஆகிவிடும். அதனால் இனிவரும் விடுமுறை காலங்களை குறைத்து பள்ளிகளை திறந்தால் தான் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்கள், தேர்வுகளை நடத்தி முடிக்க முடியும் என்பதால் எதிர் வருங்காலங்களில் உள்ள விடுமுறையை குறைப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.இதற்கிடையில் அரையாண்டு தேர்வு பிளஸ்–2 மாணவர்களுக்கு வருகிற 7–ந்தேதியும், 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9–ந்தேதியும் தொடங்க இருக்கிறது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் டிசம்பர் 21–ந்தேதிக்குள் அரையாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வுகள் நடத்தி முடிந்தாலும் அதன்பிறகு தொடர்ந்து 24–ந்தேதி வரை வகுப்புகள் நடத்தவும் வாய்ப்பு உள்ளது. 25–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் அன்று முதல் அரையாண்டு விடுமுறை விடப்படும். வழக்கமாக அரையாண்டு தேர்வு விடுமுறை கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் ஆகியவற்றை கணக்கிட்டு விடப்படும். புத்தாண்டிற்கு மறுநாள் அரசு விடுமுறை நாட்களாக (சனி, ஞாயிறு) இல்லாமல் இருந்தால் பள்ளிகள் திறக்கப்படும்.ஆனால் இந்த வருடம் மாணவர்களின் நலன் கருதி அரையாண்டு விடுமுறையை குறைத்து வேலை நாட்களாக மாற்றலாமா? அதிகாரிகள் பரிசீலிக்கிறார்கள்.வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தலின் பேரில் இணை இயக்குனர்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், ஆகிய 4 மாவட்டங்களிலும் திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இணை இயக்குனர்கள் முகாமிட்டுள்ளனர். பள்ளியில் மழைநீர் தேங்கி இருந்தால் அவற்றை வெளியேற்றவும், கழிவுகளை சுத்தப்படுத்தவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment