கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா நிவாரண உதவியாக தலா ரூ.1000 வழங்கிய ஆசிரியைகள்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 23, 2020

கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா நிவாரண உதவியாக தலா ரூ.1000 வழங்கிய ஆசிரியைகள்...

கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா நிவாரண உதவியாக தலா ரூ.1000 வழங்கிய ஆசிரியைகள்...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொரோனை நோய் அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ மாணவியரின் குடும்பத்திற்கு சனிக்கிழமை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை வீடு தேடிச் சென்று  நிவாரண உதவியாக தலா ரூ.1000 மற்றும் நோட்டுகள், பேனா உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை தங்களது சொந்த செலவில் வழங்கினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலை ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக சௌ.மேரி மற்றும் ஆசிரியையாக சீ.அமுதா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப் பள்ளியில் 20 ஏழை எளிய மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இவர்களின் பெற்றோர் ஆடு மேய்த்தல் மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்கள். தற்போது முழு முடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
இது குறித்து அறிந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை தங்களது மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து சனிக்கிழமை கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீடு தேடிச் சென்று ரொக்கப் பணம் ரூ.1000 மற்றும் நோட்டுகள், பேனாக்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை இலவசமாக வழங்கினர்.
தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியையின் இந்த சமூக அக்கறையான செயல் மற்றும் தங்களது பள்ளி மாணவ மாணவியரின் நலனில் காட்டும் அக்கறையை வட்டாரக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி ஆகியோர் வெகுவாக பாராட்டினார்.

No comments:

Post a Comment