நீட் தேர்வு எழுதாமல் பல் மருத்துவப் படிப்பு: மாணவர்களுக்கு ரூ.2 கோடி இழப்பீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 18, 2018

நீட் தேர்வு எழுதாமல் பல் மருத்துவப் படிப்பு: மாணவர்களுக்கு ரூ.2 கோடி இழப்பீடு

நீட் தேர்வு எழுதாமல் பல் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்ட 8 மாணவர்களுக்குத் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் பல் மருத்துவப் படிப்பில் சுபிக்ஷô உள்பட 8 மாணவர்கள் சேர்ந்தனர். நீட் தேர்வு எழுதாத இவர்களின் சேர்க்கைக்கு இந்திய பல் மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து சுபிக்ஷô உள்ளிட்ட 8 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய பல் மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்தியா முழுவதும் பல் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மனுதாரர்கள் நீட் தேர்வு எழுதவில்லை; எனவே, அவர்களை பல் மருத்துவப் படிப்பில் சேர்க்க ஒப்புதல் அளிக்க முடியாது. இதற்கு சட்டத்திலும் வழி எதுவுமில்லை என வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதரார்களான இந்த மாணவர்கள் சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படித்து வருகின்றனர். இவர்களது சேர்க்கையை இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அங்கீகரிக்காத காரணத்தால், இவர்கள் மருத்துவப் படிப்பில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த மாணவர்கள் செலுத்திய கல்விக்கட்டணம் முழுவதையும், அவர்களின் கல்விச் சான்றிதழ்களையும் கல்லூரி நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இது தவிர ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் 8 மாணவர்களுக்கும் ரூ.2 கோடியை கல்லூரி நிர்வாகம் 45 நாள்களுக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறும் பட்சத்தில் கல்லூரி சொத்துகளை தமிழக அரசு முடக்கம் செய்து, அதனை விற்று மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'' என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment