ஒழுங்கு நடவடிக்கையால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அதிகாரி: அனைத்தையும் ரத்து செய்து பண பலன்களையும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 25, 2018

ஒழுங்கு நடவடிக்கையால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அதிகாரி: அனைத்தையும் ரத்து செய்து பண பலன்களையும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முப்பது ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு
வராததால் பாதிக்கப்பட்ட அதிகாரி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு சேர வேண்டிய பணபலன்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பணியாற்றியவர் சுந்தரராஜன் (88), சத்துணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட பொருட்கள் இருப்பை சரிபார்க்காமல் இருந்ததாகக் கூறி, 1988-ம் ஆண்டு பணி ஓய்வு பெறுவதற்கு 10 மாதங்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் முடிவுக்கு வராததால், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய கோரியும், ஓய்வு பெற அனுமதித்து, பண பலன்காலையும், ஓய்வூதியத்தையும் வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் விசாரித்தார். அப்போது குற்ற வழக்கு நிலுவையில் இருந்ததால் ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 30 ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வராததால் பாதிக்கப்பட்ட 88 வயதான சுந்தரராஜனுக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்து, அவருக்கு வழங்க வேண்டிய பண பலன்களையும், ஓய்வூதியத்தையும் ஆறு வாரங்களில் வழங்க உத்தரவிட்டார்.
மேலும், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை இதுபோல பல ஆண்டுகளாக முடிவுக்கு கொண்டு வராமல் இருப்பது ஏற்று கொள்ளத்தக்கதல்ல என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை உதாரணமாக கொண்டு அரசு அதிகாரிகள் கண் திறக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment