மே மாதம் பொது இட மாறுதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர்கள் இடையே வலுத்துள்ளது.அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பொது இட மாறுதல் வழங்கப்படும். மே மாதத்தில், மாவட்ட தலைநகரங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தங்கள் விருப்ப அடிப்படையில், புதிய பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவது வழக்கம்.
இம்மாத இறுதிக்குள், இடமாறுதலுக்கான விண்ணப்பம் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும். அதன்பின், பணிமூப்பு அடிப்படையில் மாறுதலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்.கோடை விடுமுறைக்குபின், பள்ளி திறக்கப்படும் நாளில் (ஜூன் 1) , மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் பணியில் சேருவர். இதனால், ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டிய ஊருக்கு குடும்பத்துடன் குடிபெயர்வதும், கல்வியாண்டின் துவக்கத்திலேயே, பள்ளியில் பணியில் சேருவதால், மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பதும், இதன் மூலம் தவிர்க்கப்படும்.
நடப்பாண்டில் இதுவரை, இடமாறுதல் விண்ணப்பம் பெறுவதற்கான, எந்த நடவடிக்கையும்இல்லாதது, ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இடமாறுதல் கலந்தாய்வை தள்ளி போடக்கூடாது; தேர்தல் கமிஷனிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment