புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே நபருக்கு பல்வேறு பெயர்களில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர கிரிமினல் தண்டனை அல்லது போலி அடையாளத்துக்காக ஒருவரது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்போது, மற்றொரு உரிமத்தை அவர் முறைகேடான வழியில் பெறுவதை தடுக்கவும் இந்நடவடிக்கை உதவும்.
இந்த புதிய முறை வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய சாலை அமைச்சகம் இது தொடர்பான பணிகளை ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும், தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் ஓட்டுநர் உரிமம் வழங்குவது என்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்த பாதுகாப்பு முறையை பின்பற்றும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில், பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை பெறும் முறை இதன் மூலம் தடுக்கப்படும் என்றும் மத்திய அரசு நம்புகிறது. அதன்படி புதிதாக ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கு நபர்களுக்கு மட்டுமின்றி, காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வருபவர்களிடமும் ஆதார் எண்ணை கேட்டுப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment