'செகண்ட் ஹேண்ட்' வாகனங்களை வாங்குவோர், தங்கள் பெயருக்கு உரிமையை மாற்றாமல் இயக்குவதும், அதனால், விற்போர் மற்றும் வாங்குவோர் தண்டனையை அனுபவிப்பதும் அதிகரித்து வருகிறது.
ஒருவர் பயன்படுத்திய வாகனத்தை, மற்றவரிடம் விற்கும் போது, விற்றது, வாங்கியதற்கான உரிமையை, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் இருந்து பெற வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யாமல், பழைய வாகனங்களை வாங்கி இயக்குவதால், இருவருக்கும் தண்டனை கிடைக்கிறது. பழைய வாகனத்தை விற்பவர், படிவம், 29ல், வாங்குபவரின் பெயர், முகவரியை பூர்த்தி செய்து, 14 நாட்களுக்குள், வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
அதன் நகலை, வாங்குபவரிடமும் வழங்க வேண்டும். வாகனம் விற்ற, 75 நாட்களுக்குள், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் தகவல் அனுப்பி, வாங்கியவரின் பெயருக்கு மாற்ற வேண்டும்.
பழைய வாகனத்தை வாங்குபவர், வாகனத்தின் பதிவு புத்தகம் என்ற, ஆர்.சி., புக், இன்சூரன்ஸ், முகவரி சான்று ஆகியவற்றுடன், வாகனம் வாங்கிய, 30 நாட்களுக்குள், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று வாகன உரிமையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யாமல் விற்றால், வாகனம் வாங்கியவர், விபத்தை ஏற்படுத்தினாலோ, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, வாகனத்தின் உரிமையாளர் என்ற முறையில், முதல் உரிமையாளரே, முதலில் விசாரிக்கப்படுவதுடன், தண்டனையையும் பெறுவார்.
பெயர் மாற்றம் செய்யாமல், வாங்கியவருக்கு விபத்து ஏற்பட்டால், அவரால் வாகனத்துக்கும், அவருக்குமான இன்சூரன்ஸ் பெற முடியாது.
அதே போல, வண்டியின் உரிமையாளர் இறந்தால், இறந்த விபரத்தை, படிவம், 31ல் பூர்த்தி செய்து, 30 நாட்களுக்குள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும், அடுத்து வாகனத்தை பயன்படுத்த உள்ளவரின் பெயருக்கு, வாகன உரிமையை மாற்ற வேண்டும்.
இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது:வாகன உரிமை பெறுவதற்கான கட்டணத்தில் பாதி தான், வாகன பெயர் மாற்றம் செய்வதற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யாதவர்களை, கண்டறிவது மிகவும் கடினம். பெயர் மாற்றத்திற்கான நடைமுறையும்
எளிதானது. ஆனால், பெரும்பாலான டீலர்கள் மற்றும் விற்பனையாளர்கள், 'சிங்கிள் ஓனர்' என்ற முறையில், அடுத்தடுத்தவருக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால், உரிமையாளரும், வாங்கியவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment