தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 14 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் புதிய அரசு கல்லூரிகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் துவங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் பொருட்டு உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தெரிவுப் பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் 1006 நபர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்ய தெரிவு செய்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 1006 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று 5 நபர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித் துறைச் செயலாளர் அபூர்வா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment