இணையதளத்தில் அரசாணைகள் வெளியிட வழக்கு . - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 9, 2016

இணையதளத்தில் அரசாணைகள் வெளியிட வழக்கு .

தமிழக அரசு அரசாணை, அறிவிப்புகளை இணையதளத்தில் வெளியிட தாக்கலான வழக்கில், 'அரசாணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அனைத்துத் துறைகளுக்கும் 2014ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை முறையாக அமல்படுத்தினாலே போதுமானது,' எனக்கூறி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக அரசு அரசாணை, அறிவிப்புகள், விதிகள், சுற்றறிக்கைகளை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது. இதனால், அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை. அரசாணைகள் பற்றி தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால், முழுமையான பதில் இல்லை.மத்திய அரசு அரசாணைகளை, அதன் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடுகிறது. அரசாணைகள், அறிவிப்புகளை இணையதளத்தில் வெளியிட்டால்தான், மக்கள் பயனடைய முடியும். இதை வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். அரசாணை, அறிவிப்புகள், சுற்றறிக்கை, விதிகளை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ரமேஷ் மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு உத்தரவு:அரசாணைகளை எளிதில் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்தால், தேவையற்ற அலைச்சல் இருக்காது. பணம் விரயமாகாது. அதிகாரிகளுக்கு பணிச்சுமை குறையும்.

மாவட்ட அரசு தலைமை அலுவலகங்களில் உள்ள பழைய ஆவணங்களை முறைப்படுத்தி, பராமரிக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி, இணையதளத்தில் அரசாணைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அனைத்துத் துறைகளுக்கும் 2014 ஜூலையில் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதை முறையாக அமல்படுத்தினாலே போதுமானது. இந்நீதிமன்றம் தனியாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கை பைசல் செய்கிறோம் என்றனர். மனுதாரர்ஆஜரானார்.

No comments:

Post a Comment