ஒரு ரூபாய்க்கு இன்று நூறு !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 30, 2016

ஒரு ரூபாய்க்கு இன்று நூறு !!

நுாறு, ஐநுாறு ரூபாய் நோட்டுகளின், 'முதல்வனான' ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது. 'ஒத்த ரூபா நோட்டு' என, சற்றே மலிவாக அழைக்கப்பட்டாலும், பிற ரூபாய் நோட்டுகள் உருவாக, இந்த ஒரு ரூபாய் நோட்டு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது.

கடந்த, 1917, நவ., 30ல், முதல் ஒரு ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதைய வர்த்தகர்கள், பண பரிவர்த்தனை செய்ய, இந்த ஒரு ரூபாய் நோட்டு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. கோவை முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன், இந்த பழைய ரூபாய் நோட்டுகளை, பத்திரமாக பராமரித்து வருகிறார்.

அவர் கூறியதாவது: முதல் ஒரு ரூபாய் நோட்டின் இருபுறமும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. 1935, ஏப்., 1ல் ரூபாய் நோட்டு அச்சிடும் உரிமம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது. அதன் பின், அச்சிடப்பட்ட, முதல் ஒரு ரூபாய் நோட்டில், முதலில் எட்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 1940ல் அச்சிடப்பட்ட நோட்டில், ஆறாவது ஜார்ஜின் உருவப்படம் அச்சிடப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின், பதவியேற்ற நிதியமைச்சரின் மேற்பார்வையில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு, மகிழ்ச்சியில் திளைத்திருந்த மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த, 1949ல் நிதித்துறை செயலர், கே.ஆர்.கே.மேனன் கையெழுத்திட்ட நோட்டில், முதல் முதலாக அசோக ஸ்துாபி இடம் பெற்றது.


1951ல் ஹிந்தியில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் வெளியானது. அதன் பின், 1994ல், நிறுத்தப்பட்ட, ஒரு ரூபாய் நோட்டு, 2015 மார்ச், 6ல், மறுபடியும் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டு அச்சிட, 1.14 காசு செலவாவதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். கடந்த, 1943ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை, 13 ரூபாய் ஆக இருந்தது. அதன்படி எடுத்துக் கொண்டால், இன்று அந்த ஒரு ரூபாய் நோட்டு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது. தற்போது அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை விட, இந்த ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு, அதிகம் என்பது தான் வினோதம்!

No comments:

Post a Comment