கல்வி உதவித் தொகை : ஆதார் எண் கட்டாயம் !!
கடந்த 2 வாரங்களுக்கு முன், சிம் கார்டு முறைகேடுகளைத் தடுக்க ஆதாருடன் செல்பேசி எண்ணை இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறவும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடந்த 2015-16ஆம் ஆண்டு, நாடு முழுவதும் 2.05 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.
இந்நிலையில், இந்த உதவித் தொகையைப் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது அவசியம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 15ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம், உதவித் தொகையைப் பெற வரும் ஜுன் 30ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் முதல்வர்கள் உதவிசெய்ய வேண்டும்.
சமூக நீதி மற்றும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 12 கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ஆதார் எண் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஆதார் எண் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment