உங்களின் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் இதெல்லாம் இருக்கலாமே! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 24, 2017

உங்களின் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் இதெல்லாம் இருக்கலாமே!


காலை பரபரப்புக்கு இடையில்  சுட்டிக் குழந்தையின் லன்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்சில் என்ன கொடுத்து அனுப்புவது என்பது தான் அம்மாக்களின் தலையாய பிரச்னை.
கொடுப்பது எதுவாயினும் அதில் சரிவிகித சத்துக்கள் கலந்திருக்க வேண்டுமல்லவா? அதை விட முக்கியம் முகம் சுழிக்காமல் அதை உங்கள் குழந்தை விரும்பி சாப்பிட வேண்டும்.குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ், லஞ்ச் என்ன கொடுத்து விடலாம் என விளக்கம் அளிக்கிறார் மதுரை மீனாட்சி மருத்துவமனை டயட்டீசியன் ஜெயந்திலால்.
* குழந்தைகள் எண்ணெயில் பொரித்த பண்டங்களை ‘ஸ்நாக்ஸாக’ கொண்டு செல்வதற்கே விரும்புவர். இவற்றில் எவ்வித சத்தும் கிடைப்பது இல்லை. காய்கள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கலாம்.
* சுண்டல், பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறு வகைகளை வேக வைத்து தாளித்து, சிறிது தேங்காய் துறுவல் சேர்த்து ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.
* ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை சிறிது, சிறிதாக நறுக்கியும், மாதுளையை உரித்தும், சிறிது மிளகு, சீரகத்தூள் மற்றும் உப்பு தூவி வழங்கலாம்.
* வெள்ளரி, காரட்டை நறுக்கி சிறிது மிளகு, சீரகத்தூள் மற்றும் உப்பு தூவி கொடுத்தால் சுவை கூடும்.
* வேர்க்கடலையை வேகவைத்து உறித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கி,  உறித்த வேர்கடலையை அதனுடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்தால் போதும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
* பச்சரிசி மாவில் சிறிது வெல்லம், பொரிகடலை தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டை பிடித்து,  இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து வழங்கலாம்.
* பொரி கடலையை மிக்சியில் நைசாக அரைத்து கொள்ள வேண்டும். அதே அளவு சர்க்கரையையும் நைசாக அரைத்து,  இரண்டையும் மிக்ஸ் செய்து சூடான நெய்யை விட்டு உருண்டை பிடித்து வழங்கலாம். இத்துடன் உலர் முந்திரி, திராட்சையை கலந்து வழங்கலாம். பொரி கடலைக்கு பதிலாக பாசிப்பயறு மற்றும் பாசிபருப்பையும் பயன்படுத்தலாம்.
சில குழந்தைகள் மதிய உணவிற்கு டிபன் அயிட்டங்கள் கொண்டு செல்ல விரும்புவார்கள். அவர்களுக்கு,
* இட்லியை கத்தியால், பல துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சிறிது நெய், சாம்பார் ஊற்றி கொடுக்கலாம். போர்க் ஸ்பூன் கொடுத்தால் ஆசையாக எடுத்து சாப்பிடுவார்கள்.
*சப்பாத்தி மாவோடு சிறிது பீட்ரூட் துருவல்/ காரட் துருவல்/ கீரைகள் சேர்த்து தேய்த்து சாப்பாத்தி போட்டு தரலாம்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி தாளித்து வேகவைத்த உருளை/பட்டர் பீன்ஸ்/பட்டாணி/பீன்ஸ், காரட் போன்ற காய்கறிகளை சேர்த்து,  சிறிது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இந்த கலவையை சப்பாத்தி அல்லது தோசைக்குள் மடித்து கொடுத்தால் மசாலா சாப்பாத்தி போல் விரும்பி உண்பார்கள்.
* லெமன் சாதம் செய்யும் போது சிறிது நிலக்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து வழங்கலாம். இதே போல் புளி சாதம் மற்றும் தேங்காய் சாதத்திலும் கலந்து வழங்கலாம். போதிய சத்துக்களும் கிடைக்கும்
* ஒரு டம்ளர் அரிசியுன், அரை டம்ளர் துவரம் பருப்பு, சிறிது வெங்காயம், புளிக்கரைசல், தக்காளி, பீன்ஸ், காரட், தேவையான மிளகாய்த்தூள், உப்பு, சீரகம், வெந்தயத்தூள் சேர்த்து அளவாக தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இறக்கினால் கம, கம சாம்பார் சாதம்.
* வாணலியில் வெங்காயம், தக்காளி வதக்கி அதனுடன் பீன்ஸ், காரட் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 முட்டைகளை உடைத்து நன்கு வதக்கி இத்துடன் மிளகுத்தூள், உப்பு சேர்க்க வேண்டும். தனியாக வேக வைத்த சாதத்துடன்,  இக்கலவையை கலந்து வழங்கலாம். இதே முறையில் பாஸ்மதி ரைஸ் கலந்து ப்ரைடு ரைஸ் கொடுக்கலாம்.
* வெஜிடபிள் ரைஸ் செய்யும் போது,  மீல் மேக்கர் கலந்து செய்து வழங்கினால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

No comments:

Post a Comment