தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியதிட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு....கோட்டையை நோக்கி நகரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 30, 2023

தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியதிட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு....கோட்டையை நோக்கி நகரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு

சென்னை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி இன்று, சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணியை அறிவித்துள்ளது.. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆசிரியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தர உள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் அருகில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

முரண்பாடுகள்: திமுக தன்னுடைய சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்றது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்றது.

கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை.

ஏமாற்றம் : இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் உள்ளிட்ட கூட்டமைப்புகள் போராட்டங்கள் அறிவித்ததை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் எவ்வித பயன்களையும் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து திரும்பப் பெற்று ஆசிரியர்கள் முழு நேரமும் சுதந்திரமாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இணையதளத்தில் புள்ளி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுமையாக கற்பித்தல் பணியில் ஈடுபட தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள்: அதேபோன்று ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்ல தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய தேவை இல்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து, ஒரு சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும்..

இன்னும் இதுபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் மாதம் 29 ம் தேதி, சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணியாக சென்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிப்பது என மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாழ்வாதார கோரிக்கைகள்: தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்ந்த வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறியிருந்தார்.

அந்தவகையில், இன்றைய தினம், ஆசிரியர்கள் கோட்டையை நோக்கி பேரணி மேற்கொள்ள உள்ளனர்.. ஏற்கனவே அரசு ஊழியர்களும், தங்களது கோரிக்கையை தமிக அரசு நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கத்தை கொட்டிவருகிறார்கள்..

வாக்குறுதிகள்: வாக்குறுதியில் சொன்ன எதையுமே நிறைவேற்றாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் நுாறு சதவீதம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக சொல்கிறார்.. அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து வரும்நிலையில், ஆசிரியர்களும் போராட்டத்தை தொடங்கி உள்ளது, திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை தந்து வருகிறது.

No comments:

Post a Comment