தொலைதொடர்பு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் டிராய் நிறுவனம் 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
தொலைபேசி சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறினார்.
முன்னதாக, 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என டிராய் அறிவித்திருந்தது.
தற்போது அந்த கால அவகாசம் ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு சேவையை பயன்படுத்துவோர் தங்களது கருத்துகளை அனுப்பிவைக்க வேண்டும்.
'சமநிலை இணைய சேவை' குறித்து இதுவரை 16.5 லட்சம் பேர் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். டிராய் அறிவித்த திட்டங்களிலேயே இதற்குதான் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக், ப்ரீபேசிஸ் மூலம் சுமார் 8 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதே அளவிலான மக்களும் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கும் ப்ரீபேசிஸ் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் ஜீரோ என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்த பிறகே, சமநிலை இணைய சேவை குறித்த விவாதம் எழுந்தது.
அது என்ன 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி)
இணையத்தைப் பயன்படுத்தும் நபர் எதை வேண்டுமானாலும் பார்க்க, எந்த இணைய சேவை நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்துக்குள்ளும் நுழைந்து பார்க்க, எந்தவோர் இணைய வணிக நிறுவனத்துடனும் இ-வர்த்தகம் செய்யத் தடையில்லாத நிலைமைதான் சமநிலை இணைய சேவை என்பது.
யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம், ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம், கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம். ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும் பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம். மின் கட்டணம் செலுத்தலாம், வங்கி சேவையை பெறலாம்.
இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.
ஆனால், சேவைகளைக் கட்டுப்படுத்துதல், சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல், சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன.
இது இணைய சமநிலையைப் பாதிக்கும் என இணையத்தை காப்போம் என்ற கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment