புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் வினியோக பணி தீவிரம் அடைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி ஊழியர்கள், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறியதாவது: வங்கிகளில், 10ம் தேதியில் இருந்து, பழைய
நோட்டுகளை மாற்றுவதற்காகவும், பணம் எடுப்பதற்காகவும், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதனால், சனி, ஞாயிறு நாட்களிலும் வங்கிகள் செயல்பட்டன. அந்த வங்கிகளுக்கு, பணம் வினியோகிக்கும் பணியில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதால், ரிசர்வ் வங்கி ஊழியர்களும் ஞாயிற்றுக் கிழமை பணியாற்றினர்.
நிபந்தனை
மேலும், மற்ற வங்கிகளில் இன்னும் கூட்டம் குறையாததால், ரிசர்வ் வங்கி ஊழியர்கள், குறிப்பாக, ரொக்கம் மற்றும் சில்லரை
வினியோகப் பிரிவில் இருப்பவர்களுக்கு, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுஇது தவிர, விடுப்பில் உள்ளவர்களும் அழைக்கப்படுகின்றனர். விடுப்புக்காக விண்ணப்பிப்போரிடம், 'தேவைப்படும் நேரத்தில் அழைத்தால்,பணிக்கு வர வேண்டும்' என, நிபந்தனை விதிக்கப்படுகிறது.
தற்போது, மைசூரில் இருந்து வந்துள்ள கன்டெய்னர்களில், 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, புதிய பணம் உள்ளது. அதனால், பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.
ஒரு நாளில் ரூ.10 ஆயிரம்
வங்கி கணக்கில் இருந்து, ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனும் உச்சவரம்பு, நேற்று முதல் தளர்த்தப்பட்டதால், பொதுமக்கள் தாராளமாக பணம் எடுத்துச் சென்றனர்.
கடந்த, 8ம் தேதி நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனஅறிவிக்கப்பட்டது. அதனால், பழைய நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நாடு முழுவதும், 100, 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சமாளிப்பதற்காக, வங்கிகளுக்கு, அதிக நோட்டுகளை ரிசர்வ் வங்கி அனுப்பியது.
வங்கிகளில், கூடுதல் கவுன்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்களும் விடுப்பு எடுக்காமல், பணிக்கு வந்தனர். நேற்று, நான்காவது நாளாக, வங்கிகளில் காலை முதல் நீண்ட வரிசையில், மக்கள் பொறுமையுடன் காத்திருந்து, தங்கள் கணக்கில் இருந்து, பணத்தை எடுத்துச் சென்றனர்.
பொது மக்களின் தேவைக்கேற்ப, வங்கிகளில், 100, 50 ரூபாய் இருப்பு வைக்கப்பட்டு, தடையின்றி வினியோகிக்கப்பட்டது. ஒருவர், தன் கணக்கில் இருந்து, ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டது. அதனால், தங்களுக்கு தேவையான தொகையை, மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment