தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் பிரீமியம் தாமதமாக செலுத்தும்பட்சத்தில் அபராதக் கட்டணத்தில் இருந்து விலக்கு உள்ளிட்ட சில சலுகைகளை எல்ஐசி வழங்கியுள்ளது.எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.
ஏராளமானோர் தங்களுடைய பாலிசி ஆவணங்களை இழந்துள்ளனர். மேலும், சில இடங்களில் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்ஐசி நிறுவனம் சில சலுகைகளை வழங்கி உள்ளது. இதன்படி, பாலிசிக்கான பிரீமியத்தை தாமதமாக செலுத்தினால் அபராதக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
மேலும், வெள்ளத்தால் உயிரிழந்த பாலிசிதாரர்களுக்கு கிளைம் பெறுவதற்கு சாதாரண இறப்புச் சான்று அளித்தால் போதுமானது. காவல்துறை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் தேவையில்லை.அத்துடன், கிளைம் பெற பின்வரும் தொலைபேசி எண்களை அழைத்தால் பாலிசிதாரரின் வீட்டுக்கே வந்து சேவை வழங்கப்படும். சென்னை: 044-1251/28884300/28611642/28611912. கடலூர் மற்றும் புதுச்சேரி: 0416-1251/2256615/2252181. தஞ்சாவூர்: 0431-1251/2741000/2740734.
இதைத் தவிர, பொன்விழா நிதியில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்ஐசி நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது.
No comments:
Post a Comment