திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 27, 2019

திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப் போகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி அன்றே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடும் கோடை வெயில் காரணமாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கோடையில் தண்ணீர்  பஞ்சமும் நிலவுகிறது.

இதனால் இந்த ஆண்டு பள்ளிகளை அறிவித்தபடி ஜூன் 3-ம் தேதி அன்று திறக்காமல் சற்று தாமதமாக திறக்கும்படி பெற்றோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.

கடும் வெயில் காரணமாக 2017-ம் ஆண்டு, ஜூன் 1-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு கடும் கோடையில்  ஜூன் 1-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த ஆண்டும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத்தாண்டி வாட்டி வருகிறது. கடும் கோடை, தண்ணீர்  பஞ்சம் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி  ஜூன் 10-க்கு தள்ளி வைக்கப்படலாம் என்கிற தகவல் பரவியது.

இதுகுறித்து கருத்து கூறாமல் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்துவந்த நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திட்டமிட்டபடி வழக்கமாக ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க வேண்டிய நிலையிலுள்ளதால் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 3 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment