ரயிலில் சிறுவர், சிறுமியர்களுக்கு முழு கட்டணம் செலுத்தினால் மட்டுமே இருக்கை வசதி ஒதுக்கப்படும் என்ற புதிய விதிமுறை வருகிற ஏப்ரல் 22 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரயி்லில் கட்டண நடைமுறையில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. நடைபாதை கட்டண உயர்வு, சரக்கு கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து குழந்தைகள், சிறுவர், சிறுமியருக்கான அரை கட்டண நடைமுறையிலும் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்திருந்தது. தற்போது அது அமலுக்கு வர உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தற்போது ரயில்களில் பயணம் செய்யும் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு அரை கட்டணம் செலுத்தினாலும் அவர்களுக்கு இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் அளிக்கப்பட்டு வந்தன. அதே சமயம் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இனி இந்த நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. அதற்கு பதிலாக 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்த உள்ளது.
இதன் படி 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கட்டணம் செலுத்தினால் மட்டுமே இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும். ஏப்ரல் 22ம் தேதி இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.. இதன் மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.525 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்தனர். ரயில்வேயின் இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்க பயணிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment