தேர்தல் நாளில் 30 நிமிட உணவு இடைவேளை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 31, 2016

தேர்தல் நாளில் 30 நிமிட உணவு இடைவேளை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் 30 நிமிடம் உணவு இடைவேளை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களிடம் தேர்தல் உறுதிமொழி படிவம் வழங்கி பெற்றோரிடம் கையெழுத்து பெற்று வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1492 ஆரம்பப் பள்ளிகள், 419 நடுநிலைப் பள்ளிகள் என தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 1911 பள்ளிகள் மூலம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 586 மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு உறுதிமொழி படிவம் வழங்குவது ஆசிரியர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை அளிப்பது போல உள்ளது. ஆகவே, உரிய படிவங்களை வருவாய்த்துறை மூலம் வழங்கமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை நேரம் ஒதுக்க வேண்டும். கடந்த தேர்தலில் பல ஆசிரியர்கள் தபால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இந்தத் தேர்தலில் அதுபோன்ற சூழல் ஏற்படாமல் தாங்கள் பணியாற்றும் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வசதியாக பணிச்சான்று அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர் பணியில் இருந்து நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.வாக்குச்சாவடியில் தேர்தல் நிறைவு பெற்ற பின்பு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் இதரப் பொருள்களை வாக்குப்பதிவு நிறைவு பெற்ற 2 மணி நேரத்திற்குள் அதிகாரிகள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பணிக்கான வாக்குச்சாவடி இருப்பிடங்களை 2 ஆவது பயிற்சி வகுப்பிலேயே தெரிவிப்பதோடு, தேர்தல் பணிக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை முதல் அல்லது இரண்டாவது பயிற்சி வகுப்பிலேயே வழங்க வேண்டும். பதற்றம்நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு அளிக்கும்போது தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலர் சோ.முருகேசன், மு.மணிமேகலை, மாவட்டச் செயலர் செ.பால்ராஜ், தலைவர் பி.ராஜ்குமார், பொருளாளர் சே.சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் மு.முத்தானந்தம் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்..

No comments:

Post a Comment