மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு, நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது திங்கள்கிழமை (மார்ச் 28) வழங்கப்படுகிறது. மேலும் 51 பேருக்கு மற்ற பத்ம விருதுகள் தரப்படுகின்றன.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் வண்ணமயமான விழாவில், திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி, தனது கணவரின் சார்பில் இவ்விருதை பெற்றுக் கொள்கிறார்.
இவர்களைத் தவிர, மத்திய முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய், பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர், பேட்மிண்டன் வீராங்கனை சானியா நெவால் உள்ளிட்ட 8 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும், பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் உள்பட 43 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கெளரவிக்கிறார்.
இவர்களுடன், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரபல நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட மீதமுள்ள 56 பேருக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள மற்றொரு விழாவில், பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன.பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்த 112 பேர், நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment