பெண் குழந்தைகளைக் கொண்டாடும் விதமாக, பெங்களூருவில் புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பெங்களூரு மேயர் சம்பத் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், ''பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுகப் பிரசவம் மூலம் ஜனவரி 1, 2018 அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். இந்த உதவி அவரின் கல்லூரிப் படிப்பு வரை தொடரும்.
இதற்காக பெங்களூரு மாநகராட்சி ரூ.5 லட்சம் பணத்தை நகர ஆணையர் மற்றும் பெண் குழந்தையின் பெயரில் ரொக்கமாக வரவு வைக்கும். அதன்மூலம் கிடைக்கும் வட்டி, பெண் குழந்தையின் படிப்புக்கு உதவும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் பிறக்கும் குழந்தை குறித்து அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். முதல் பெண் குழந்தை குறித்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் அளிப்பர்.
சிசேரியன் மூலம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதால் சுகப் பிரசவம் மூலம் பிறக்கும் பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment