500 ரோபோக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்!"- செங்கோட்டையன் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, February 17, 2018

500 ரோபோக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்!"- செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல் விளக்க மெஷின்களை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள நாமக்கல் தெற்கு அரசுப்பள்ளியின் 125-வது ஆண்டுவிழா இன்று (17.2.2018) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "தனியார் பள்ளிகள் அதிகமானதால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டவும், லாரி தொழில் முதன்மையாக உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கு அசோக் லைலேண்டைப் போல் மேலும் ஒரு பயிற்சிப் பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அமைச்சர் தங்கமணி பேசுகையில், "நாமக்கல் மாவட்டம் இந்த 7 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சித் திட்டங்களை வேறு எந்த ஆண்டிலும் பெற்றதில்லை. பள்ளிப்பாளையம் பாலத்திற்கு புதியதாக இணைப்பு பாலம் கட்டப்பட்டதால், போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் பயணித்து வருகின்றனர். அதேபோல் எஸ்.பி.பி.
காலனியில் புதியதாக 39 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட்டு தற்போது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த ஆண்டிற்குள் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்" என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "தமிழகத்தில் மேலும் 312 அரசு பள்ளிகளில் நீட் தேர்வு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீட்தேர்வு மையங்களின் எண்ணிக்கை 412 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் வரும் காலத்தில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில், நீட்தேர்வு மட்டுமின்றி அனைத்து தேர்வுகளையும் எளிதாக எதிர்கொள்ளும் வகையிலும், பிளஸ்- 2 முடித்தவுடனேயே வேலைவாய்ப்பை உறுதி செய்யும் அளவிற்கும் பாடத்திட்டங்கள் இருக்கும். பெற்றோர்கள், மாணவர்கள் கல்வி குறித்த சந்தேகத்தை தெளிவுபடுத்தும் வகையிலும், எந்த பாடத்திட்டத்தை தேர்வு செய்தால் என்ன பயன் என தெரிந்து கொள்ளும் வகையிலும் விரைவில் '14417' என்ற இலவச எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எண்ணில் 24 மணிநேரமும் தொடர்புகொண்டு கல்வி குறித்த சந்தேகங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 10 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸ் நடத்த வழிவகுக்கப்படும்.
மாணவர்கள் விபத்தில் சிக்க நேர்ந்து உயிரிழந்தால் ஒரு லட்ச ரூபாயும், பெரிய காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் அடைந்தால் ரூ.25 ஆயிரம் ரூபாயும் விபத்தில் சிக்கிய 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்" என்றார்.
நிகழ்ச்சி முடிந்த பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. வெல்பிரண்டு என்ற புதிய ஹெல்ப்லைன் திட்டம் துவக்கப்பட்டு, தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன், மனஅழுத்தம் குறைப்பதற்கான வழிகள் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல்விளக்க மெஷின்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் ஓராண்டு ஆட்சி நிறைவுற்று, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளதால் இதனைப் பொறுக்க முடியாத சிலர் ஆட்சியை குறை சொல்லிக் கொண்டுள்ளனர்" என்று கூறினார்.

No comments:

Post a Comment