உயர்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களின் சொத்து மற்றும் அரசியல் செல்வாக்கு குறித்து, உளவுத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், விசாரணையை துவங்கி உள்ளனர்.முதல்வரின் தனிப்பிரிவு, பல ஆணையங்கள், பல்கலை மானியக் குழு, தமிழக கவர்னர் அலுவலகம் என, பல இடங்களுக்கும், உயர்கல்வித் துறையின் விதிமீறல் தொடர்பான புகார்கள்,
குவிந்த வண்ணம் உள்ளன. முதல் கட்ட விசாரணை நடத்தியதில் இப்புகார்களுக்கு, ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தமிழக உளவுத் துறையில் உள்ள அரசியல் பிரிவு அதிகாரிகள், அரசுத் துறையில், கல்விப் பிரிவை கவனிக்கும் போலீசார் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தனித்தனியே விசாரணையை துவங்கி உள்ளனர்.இந்த விசாரணையில், உயர்கல்வி முறைகேடுகள் குறித்து, பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் நியமனத்தில், அமைச்சர் மற்றும் செயலர் பெயரைச் சொல்லி, பல ஏஜன்ட்கள், லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளனர்
ஏஜன்ட்களில் சிலர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், பல பல்கலைகள், கல்லுாரிகளின் நிகழ்ச்சிகளுக்குச் சென்று, வி.ஐ.பி., வரிசையில் கல்வியாளர்களுடன் அமர்ந்துள்ளனர். பின், அவர்களை அறிமுகம் செய்து கொண்டு, புதிய நியமனங்களுக்கு வசூல் வேட்டை நடத்தி உள்ளனர்
உண்மையில் பணி நியமனம் பெற்றவர்களை, வேண்டும் என்றே தொலைதுார இடத்தில் பணி அமர்த்திவிட்டு, பின் அவர்கள் விரும்பிய இடத்தில், இட மாற்றம் செய்ய பெரும் தொகை வாங்கி உள்ளனர். இதற்கு, பேராசிரியர்களுக்கு தனித்தனி அரசாணை பிறப்பித்துள்ளனர். இது குறித்து, பொதுத் துறையும், தலைமை செயலகத் துறையும் விசாரணை நடத்தி வருகின்றன
சிலர், சங்கங்களின் பெயரால், ஆசிரியர்களிடம் வசூல் செய்து, அத்தொகையை, அமைச்சரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவது போல், நன்கொடையாகக் கொடுத்ததாக, ஆசிரியர்களிடம் கணக்கு காட்டி உள்ளனர். இந்த வகையில், சென்னை பல்கலை நுாற்றாண்டு மண்டபத்தில் நடந்த சங்க நிகழ்ச்சியில், பல லட்சம் ரூபாயை காட்டவில்லை என, ஒரு பல்கலை பதிவாளர் மீது விசாரணை நடக்கிறது.அமைச்சர் பெயரைச் சொல்லி, பல பல்கலைகளில், ஐந்து ஆண்டுகளாக கட்டடப் பணி, ஆய்வகப் பணி, தளவாடங்கள் சப்ளை போன்றவற்றில் ஈடுபட்ட சில ஒப்பந்தததாரர்கள் மீதும், ரகசிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர், பதிவாளர், பேராசிரியர், உதவி பேராசிரியர் என, பல பதவிகளை எட்டியவர்களின் பின்னணி குறித்தும், அவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தவர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது சிண்டிகேட் உறுப்பினர் பலர், எந்தவித கல்வியாளர் தகுதியும் இல்லாமல், அப்பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது ஏன் என்ற பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது. இதனால், உயர்கல்வித் துறையின் செயலகம் முதல், கல்லுாரி கல்வி இயக்குனரகம், பல்கலைகள், கல்லுாரிகள் வரை, அதிகாரிகளிடம் அச்சம் நிலவுகிறது.
இடமாறுதல் முடிவை மாற்ற கோரிக்கை:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக சுதாகர், ராமசுப்ரமணியன் உள்ளனர். நீதிபதி சுதாகர், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கும்; நீதிபதி ராமசுப்ரமணியன், ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. நீதிபதிகள், இருவரும் விரும்பி கேட்டுக் கொண்டதால், இந்த இடமாற்றம் நடக்க இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து, இடமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி, நீதிபதிகள் இருவரையும், மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வி.டி.கோபாலன், கே.துரைசாமி, கே.சீனிவாசன், முத்துகுமாரசாமி, பார்த்தசாரதி, வி.பிரகாஷ், பி.வில்சன், எம்.எஸ்.கிருஷ்ணன், சுந்தரேசன் மற்றும் வழக்கறிஞர்கள், 50 பேர், நேரில் சந்தித்து வலியுறுத்தினர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியையும், இந்த வழக்கறிஞர்கள் குழு சந்தித்து, 'நீதிபதிகளின் இடமாற்ற கோரிக்கையை ஏற்க வேண்டாம்' என, கேட்டு கொண்டனர். அத்துடன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் சட்ட அமைச்சருக்கும், கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment