பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்யா மந்திர் தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டு பேர் 1195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் 8.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியானது.
அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள், ரேங்க் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டார்.
அதன்படி, கிருஷ்ணகிரி அம்மன் நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகள் ஆர்த்தி 1195 மதிப்பெண் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று முதலிடம் இடம் பிடித்துள்ளார்.
இரண்டாம் இடத்தை திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியின் மாணவி பவித்ரா பிடித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 1194.
மூன்றாம் இடத்தை நாமக்கல் கண்டம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவி வேணுப்ரீதா பிடித்துள்ளார். அவர் 1200-க்கு 1193 மதிப்பெண் பெற்றுள்ளார்.
முதலிடம் பிடித்த மாணவி ஆர்த்தி பெற்ற மதிப்பெண் - பாடவாரியாக
தமிழ் 199
ஆங்கிலம் 197
இயற்பியல் 199
கணிதம் 200
வேதியியல் 200
உயிரியல் 200
மொத்தம் 1195
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%. வழக்கம்போல் மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.4% மாணவிகள்; 87.9% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கிய புள்ளி விவரம்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிந்தது. தமிழகத்தில் பள்ளிகள் மூலமாக 8 லட்சத்து 33 ஆயிரத்து 682 (8,33,682) பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இவர்களில் மாணவர்கள் 3,88,935, மாணவிகள் 4,44,747.
இவர்களில் பொதுக் கல்வி பிரிவில் பயின்றவர்கள் 3,50,012 மாணவர்கள், 4,20,460 மாணவிகள் ஆவர். தொழிற்கல்வி பிரிவில் பயின்றவர்கள் 38,923 மாணவர்கள், 24,287 மாணவிகள் ஆவர்.
No comments:
Post a Comment