பள்ளி வாகனங்கள் ஆய்வு பணியை தீவிரப்படுத்த உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 28, 2016

பள்ளி வாகனங்கள் ஆய்வு பணியை தீவிரப்படுத்த உத்தரவு

தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்க, இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால், பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி இன்னும் முடிவடையவில்லை. இப்பணியை விரைவுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில், 24 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடந்த பின்னரே, அவற்றை இயக்கத்திற்கு அனுமதிப்பது வழக்கம். ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது, இந்த ஆய்வு பணியை போக்குவரத்து துறை மேற்கொள்ளும்.

இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்ததால், பள்ளி வாகனங்கள் ஆய்வு பணியில் தாமதம் ஏற்பட்டது. மாவட்டம் தோறும் ஆய்வு பணி துவங்கியுள்ள போதிலும், பணி முடியவில்லை. திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட, பள்ளி வாகனங்களின் ஆய்வு தகவல் மட்டுமே, போக்குவரத்து துறை ஆணையரகத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும், 60 சதவீத பள்ளி வாகனங்களின் ஆய்வு பணி முடிந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வாகனங்களின் தகவல் குறித்து, மண்டலம் தோறும் கேட்டு உள்ளோம். ஆய்வு பணியை விரைவுப்படுத்த உத்தரவிட்டு உள்ளோம். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை தள்ளிப் போனால், அதற்குள், பள்ளி வாகனங்கள் ஆய்வு முடிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment