உணவுப்பொருள் பாக்கெட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, எடை அளவு குறித்த விவரங்களை 40 சதவீத அளவுக்கு அச்சிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.
இன்றைய சூழலில் சந்தையில் விற்பனையாகும் உணவுப் பண்டங் கள், குடிநீர், மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பாக் கெட்களில்தான் விற்கப்படுகின்றன. எந்தவொரு பொருளாக இருந்தா லும் பாக்கெட்டில் விற்கப்பட்டால், அதன்மீது தயாரிப்பாளரின் முகவரி, விலை, எடை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங் களை அச்சிடுவது கட்டாயமாகும்.
இந்த விவரங்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தால் தயாரிப்பாளர் மட்டுமின்றி, அதை நுகர்வோருக்கு விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அத் துடன், அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை பறிமுதல் செய்யவும் சட்ட விதிகள் உள்ளன.
ஆனால் காலவதி, தயாரிப்பு தேதியை பார்த்து வாங்கும் நுகர் வோர் குறைவு. போதிய விழிப் புணர்வு இல்லாததே இதற்கு காரணம். அதுமட்டுமின்றி, பாக்கெட்களில் சிறிய அளவில் விவரங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் அதை கவனிக்க இயலாமல் போகிறது.
இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் எடை யளவு சட்ட விதியில் சில திருத் தங்களை செய்துள்ளது. அதன்படி, அனைத்து பொருட்களிலும் தயாரிப்பு தேதி, விலை, எடை, நுகர்வோர் குறைதீர் எண் உள் ளிட்ட விவரங்களை நுகர்வோர் எளிதில் படிக்கும் வகையில் பாக்கெட்டின் மொத்த அளவில் 40 சதவீத அளவுக்கு கட்டாயம் அச்சிட வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது. இந்த புதிய விதி முறை ஜூலை முதல் நடை முறைக்கு வரும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
கால அவகாசம் தேவை
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மத்திய அரசின் புதிய விதிமுறை யில், 40 சதவீத அளவு என குறிப்பிடுவதிலேயே முரண்பாடு கள் உள்ளன. பாக்கெட்டின் ஒரு புறம் மட்டும் 40 சதவீத அளவுக்கு தகவல்கள் இடம்பெற வேண்டுமா அல்லது 2 பக்கங்களிலும் அச்சிட வேண்டுமா என்பது குறித்து தெரிய வில்லை. லேபிள்களில் அச்சிடப் படும் எழுத்துகளுக்கு அளவு ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்ற விவரம் சரியாக இல்லை.
பிராந்திய மொழி
ஒரு வணிகர் தமிழகத்தில் மட்டும் தனது பொருளை சந்தைப் படுத்துவதாக இருந்தால் பிராந்திய மொழியில் மட்டும் அச்சடிக்க லாமா என்பதும் தெரியவில்லை. உணவுப்பொருள் உற்பத்தியாளர் கள், பொட்டலமிடுபவர்கள் தேவைக்கேற்ப லேபிள்களை ஏற் கெனவே அச்சிட்டு வைத்திருப்பர். அந்த லேபிள்கள் தீரும்வரை போதிய காலஅவகாசம் அளிக்க வேண்டும்.
மேலும், புதிய விதிமுறை குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதில் உள்ள குறைபாடுகளை களைந்த பிறகே விதிமுறையை அமல்படுத்த வேண் டும் என மத்திய அரசை கேட் டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்கத்தக்கது
கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, ‘‘பாக்கெட் பொருட் களில் குறிப்பிட்டுள்ள தகவல்களை நுகர்வோர் எளிதாக கண்டறிந்து படிக்க ஏதுவாக மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுவரை காலாவதி தேதி, தயாரிப்பு தேதியை நுகர்வோர் தேடிக் கண்டுபிடித்து தெரிந்துகொள்ள வேண்டிய நிலை இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறை மூலம் எல்லா தகவல்களும் ஒரே இடத்தில் அச்சிடப்படும்போது, நுகர்வோர் அதைப் பார்த்துவிட்டு வாங்க வழிவகை ஏற்படும். எனவே, இந்த உத்தரவை வரவேற்கிறோம்’’ என்றார்.
No comments:
Post a Comment