சமூக வலைத் தளங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் குறை கூறுவோர் கவனத்திற்கு !
கணக்கில் காட்டாத வருமானத்தைக் கொண்டவர்களே, வரி ஏய்ப்பு செய்கின்றவர்களே, ஆடிட்டரை வைத்துப் பொய் கணக்குக் காட்டுபவர்களே அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் குறை கூறுகிறார்கள்;
ஊரில் உள்ள அனைவரையும் முதலில் வருமானத்திற்கு ஏற்ற வரிகளைக் கட்டச் சொல்லுங்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தொழில் வரி என்று ஒன்று இருக்கிறது;கேள்வியாவது பட்டதுண்டா?நாங்கள் வருடம் அவரவர் வருமானத்திற்கேற்ப வரிகள் கட்டுகிறோம்(கவனிக்க:வருமான வரி மட்டுமல்ல, தொழில் வரி)
இவர்களுக்கு எதுக்கு இத்தனை சம்பளம்?' என்று கேட்பவர்கள்,ஒரு நாள், ஒரே ஒரு நாள் காலை முதல் மாலை வரை வகுப்பு எடுத்து விட்டு,இதே கேள்வியைக் கேளுங்கள்!மேலும் இன்று வாங்கும் சம்பளத்தை,அரசு ஒரே நாளில் தூக்கிக் கொடுத்து விடவில்லை.40,50 ஆண்டுகள் படிப்படியாக,பல போராட்டங்களுக்கு அப்புறமே கிடைத்த சம்பளம்.இதில் அரை நூற்றாண்டு சமுதாய முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பதை வசதியாக மறந்து விடுகிறீர்கள்.
வீட்டில் ஒரு குழந்தையை/2 குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் உங்களுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால்,வகுப்பில் 40,50 குழந்தைகளை,அதுவும் நாள் முழுவதும் கவனித்துக் கொள்பவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை.
மேலும் அடிக்கடி 'அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்' என்ற வாதமும் வருகிறது.அரசுப் பணி என்பது தகுதி உள்ளோர்க்கு,காத்திருப்புப் பட்டியலில் வைத்துத் தான் தரப் படுகிறது.5,6ஆண்டுகள் காத்திருந்து,(சிலர் 10,15ஆண்டுகள் கூட)தான் இந்த வேலைக்கு வருகிறோம்.அத்தனை வருடங்கள் எங்கள் வருமானத்தை நினைத்துக் கவலைப்பட்டவர் உண்டா?
மேலும் வேலையைச் செய்வதற்குத் தான் சம்பளம் வழங்கப்படுகிறது.அதோடு முடிந்தது.நீங்கள் வாங்கும் சம்பளத்தை இந்தக் கடையில் தான் செலவு செய்ய வேண்டும் என்றால் உடன்படுவீரா?குழந்தையை எங்கு சேர்க்க வேண்டும் என்பது தனிமனித உரிமை. அதில் தலையிட்டு,எங்கள் மேல் உள்ள வெறுப்பைத் தீர்த்துக் கொள்ள நினைக்காதீர். அரசுப் பள்ளியில் சேர்த்தாலும் எங்கள் குழந்தைகள் ஒன்றும் தகுதியில்லாதவர்களாக ஆகிவிட மாட்டர்கள்.
ஒரு விவசாயி தான் விளைவிக்கிற பயிரைத் தான் சாப்பிட வேண்டும்,அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்,நடத்துனர் குடும்பத்தினர் அனைவரும் அரசுப் பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும்,ஒரு நெசவாளி,தான் நெய்கிற உடையைத் தான் அணிய வேண்டும்,விசைத்தறி உரிமையாளர் வீட்டில் அனைவரும் தங்களின் தயாரிப்பையே அணிய வேண்டும் என்பீர்களா?
ஓரிருவர் செய்யும் தவறுகளை எல்லாரும் செய்வர் என்றோ,அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? என்று தெரியாமலோ எந்த முடிவுக்கும் வராதீர்கள்.நீங்கள் சரியாக வரி கட்டாத காரணத்தால் தான் நம் நாட்டின் முன்னேற்றம் தலைகீழாக உள்ளது,கறுப்புப் பணம் அதிகரிக்கிறது,விலைவாசி தாறுமாறாக அதிகரிக்கிறது என்றும்,ஒரு பைசா கூட ஊழல் செய்யாத,வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை வருமான வரி கட்டும்(கையில் இருந்து செலவு தான் செய்கிறோமே தவிர வேறு வருமானம் இல்லை)வேலை எங்களுடையது. செய்வதை இங்கே சொன்னால் விளம்பரம் ஆகுமே.
அரசு நடவடிக்கைகளைக் கண்டு ஆசிரியர்கள் யாரும் 'குய்யோ,முறையோ' என புலம்பாததற்குக் காரணம் எங்கள் வருமானத்தை நாங்கள் மறைப்பதில்லை என்பதே.எனவே,வரும் செய்தி சரியா?தவறா? எனக் கேட்டுத் தெரிந்து பரப்புங்கள்.அதில் எள்ளளவும் தவறேயில்லை.
இதே தவறான தகவல் உலா வரும் வேளையில் கல்வி அமைச்சரே பாராட்டும் வகையில் நடந்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் பற்றி யாரேனும் எந்த க்ரூப்பிலாவது பகிர்ந்து கொண்டீர்களா?இல்லையே.
உங்களைப் போல வசதி படைத்தவர்களின் குழந்தைகளை இல்லாமல்,எளிய மக்களின் குழந்தைகளைத் தான் மெருகேற்றி விடுகிறோம்.காலில் செருப்புக் கூட அணியாத,3வேளை உணவுக்கும் கஷ்டப்படுகிற,சீருடை கூட வாங்க முடியாத வசதி கொண்டவர்கள் அவர்கள்.அவர்களைத் தேர்ச்சியடைய வைப்பது எவ்வளவு சவாலானது தெரியுமா?
தயவுசெய்து ஓரிருவர் செய்கின்ற மோசமான செயலுக்கு அனைவரையும் தவறாகப் பேசுவது தான் சந்தோசம் என்று நினைக்காதீர்கள.
No comments:
Post a Comment