புதுடெல்லி: பாஸ்போர்ட் வழங்குவதில் போலீஸ் விசாரணை காரணமாக ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. பாஸ்போர்ட் வாங்க விரும்புவோர் விண்ணப்பித்த பிறகு அவர் மீது குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கிய பிறகே பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை தற்போது உள்ளது. தற்போது அமலில் உள்ள இந்த முறையை மாற்றி பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த புதிய நடைமுறையில் ஆதார் அட்டை மூலமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள தகவல்களை ஒப்பிட்டு பார்த்து விண்ணப்பதாரரின் குற்ற வழக்குகளின் தன்மைகளை கண்டறிந்து விட முடியும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று முன்தினம் வெளியுறவுத்துறை, உள்துறை, சட்டத்துறை, புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறைக்கு தேவையான ஆதார் அட்டை உள்பட பல பரிந்துரைகளை பிரதமர் மோடிக்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்களின் ஆதார் எண்ணை வைத்து மட்டுமே இதனை ஏற்றுக் கொள்வது என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது. பாஸ்போர்ட்டுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வரும் வேளையில், செப்டம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் உதவியின் மூலமாக விண்ணப்பதாரரின் குற்றத் தன்மைகள் குறித்து உறுதி செய்வது இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், காலதாமத்தை தவிர்த்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, உயர் அதிகாரிகள் தாக்கல் செய்யும் பரிந்துரையை பிரதமர் மோடி பார்த்த பின்னர், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment