பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 3.70 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 100 படுக்கை வசதி கொண்ட கட்டிட பணியை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் கடந்த தி.மு.க. ஆட்சியில் 12 கோடி ரூபாய் மட்டுமே அரசு மருத்துவமனைகளின் மூலம் வருமானம் கிடைத்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் 680 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் மருத்துவமனைக்கு தேவையான அதிநவீன உபகரணங்கள்
வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆண்டிற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி சென்னை பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தலைமை அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி. ) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 4000 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் முதல் கட்டமாக 2172 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் எம்.டி. – எம்.எஸ். முடித்த சிறப்பு மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 1712 மருத்துவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
மொத்தம் 3899 டாக்டர்களை பணியமர்த்த உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் மருத்துவர் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாகும் என்றார்.
No comments:
Post a Comment