பள்ளிக்கல்வி இயக்கக கட்டிடத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 19, 2017

பள்ளிக்கல்வி இயக்கக கட்டிடத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடம் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன வளத்தையும், வன உயிரினங்களையும், பொது மக்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள வனப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வன உயிரினத் தாக்குதலால் உயிரிழக்கும் துயர நேர்வுகளிலும், வனக் குற்றங்களில் ஈடுபடும் குற்ற வாளிகளுடனான மோதல்களில் உயிரிழக்க நேரிடும் நேர்வுகளிலும், வீர தீர செயல் மற்றும் எதிர்பாராத அசம்பாவித சூழ்நிலை போன்ற நேர்வுகளிலும், காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்ற இழப்பீட்டுத் தொகைக்கு இணையாக வனப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை 4 லட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வடிகால் கழிவுநீர் வெளியேற்றத்தால் ஆற்று நீரில் ஏற்படும் தாக்கத்தை கண்காணிக்கும் வண்ணம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தற்போது மாதம் ஒருமுறை நீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்கின்றது. ஆற்று நீரின் தன்மையை தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் நோக்கத்துடன் நடப்பு நிதியாண்டில் பவானி ஆற்றில் 2 இடங்களில் இணைய வழி தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்நிலையங்கள் தலைமை அலுவலகம் மற்றும் உரிய மாவட்ட அலுவலகங்களுடன் இணைய வழியாக இணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment