33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 19, 2018

33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவை

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை என தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றுக்குட்பட்ட கல்லூரிகளில் கற்பிக்கப்படும் எம்.சி.ஏ. படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல் படிப்புகள் எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார், பாரதியார் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் எம்.காம்., நிர்வாகச் செயலர், எம்.காம்., கணினி பயன்பாடு உள்ளிட்ட 20 படிப்புகள் எம்.காம்., படிப்புக்கு இணையற்றவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக ஒரு படிப்புக்கு இணையான இன்னொரு படிப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றால், மூலப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் 70 சதவீதம் புதிய படிப்புக்கான பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், புதிய பாடத்திட்டம் அத்தகையதாக இல்லை என்பதால் புதிதாகத் தொடங்கப்பட்ட படிப்புகள் மூலப் படிப்புக்கு இணையற்றவை என்று அதற்காக அமைக்கப்பட்ட சமானக் குழுவின் 59-ஆவது கூட்டத்தில் முடிவெடுத்து, அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் செய்த தவறுக்காக அவற்றில் படித்த மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்படிப்புகள் அரசுப் பணிக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி தனியார் நிறுவனங்களும் இப்படிப்பை முடித்தவர்களை நிராகரிக்கக் கூடும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

எனவே, 2018-19-ஆம் கல்வியாண்டு வரை இப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பெற்ற பட்டங்கள் எம்.எஸ்சி. கணினி அறிவியல், எம்.காம். ஆகியவற்றுக்கு இணையானவை.  அரசு வேலைக்குத் தகுதியானவை என்று அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இப்படிப்புகளைத் தடை செய்ய வேண்டும்

No comments:

Post a Comment