இடைநிலை ஆசிரியர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க ஐகோர்ட்டு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 17, 2015

இடைநிலை ஆசிரியர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க ஐகோர்ட்டு

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு பள்ளிகளின் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.
இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்த தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது. இந்த 3 நபர் கமிஷன், 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், இந்த அறிக்கையின் அடிபபடையில் சம்பளத்தை மாற்றி அமைக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, 3 நபர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய் காந்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சி.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘6–வது சம்பள கமிஷன் பரிந்துரை, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட 3 நபர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்து வழங்கக் கோரி மனுதாரர் அமைப்பு கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 10–ந் தேதி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
எனவே அவரது கோரிக்கை மனுவை தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment