தமிழகத்தில், செப்டம்பர் வரை, 2.54 லட்சம் பேர், சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை, எண்ணெய் நிறுவனங்களிடம் சரண்டர் செய்துள்ளனர். காஸ் மானியத்தை சரண்டர் செய்தவர்கள் அதிகம் நிறைந்த முதல் ஐந்து மாநிலங்களில், தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.59 கோடி வீட்டு சமையல் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்; இவர்கள், ஆண்டுக்கு, தலா, 12 சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் பெறுகின்றனர். அதற்கு மேல், எவ்வளவு சிலிண்டர்கள் வேண்டுமானாலும், மானியமில்லாமல் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதேநேரத்தில், சமையல் சிலிண்டர்களுக்கான மானியம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை குறைக்க விரும்பிய மத்திய அரசு, 'வசதி படைத்தவர்கள், காஸ் சிலிண்டர் மானியத்தை, தாங்களாக முன்வந்து விட்டுக் கொடுக்க முன்வரவேண்டும்' என, அழைப்பு விடுத்தது. இருந்தும், யாரும் மானியத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில், 2014ல், பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
அனைத்திலும், 'வசதி படைத்தவர்கள், காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்து, நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும்; ஏழைகளுக்கு உதவ வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.அதை ஏற்று பலரும், 'மானியம் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் சரண்டர் செய்து வருகின்றனர். செப்டம்பர் வரை, தமிழகத்தில், 2.54 லட்சம் பேர், சமையல் சிலிண்டர்மானியத்தை சரண்டர் செய்துள்ளனர்.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏழை மக்களுக்கு மட்டும், மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, மத்திய அரசு ஊழியர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் அதிகளவில் மானியம் வேண்டாம் என, கூறி வருகின்றனர். இதுவரை, தமிழகத்தில், 2.54 லட்சம்பேர் உட்பட, நாடு முழுதும், 35 லட்சம் பேர், மானியத்தை சரண்டர் செய்துள்ளனர்.காஸ் சிலிண்டர் மானியத்தை சரண்டர் செய்தவர்கள் அதிகம் நிறைந்த முதல் ஐந்து மாநிலங்களில், தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ்., - -ஐ.பி.எஸ்.,க்கள் விட்டு கொடுப்பரா? தமிழகம் உட்பட நாடு முழுதும், 16 கோடி சமையல் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், எம்.பி., - எம்.எல்.ஏ., - ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் என, நிலையான வருவாய் ஈட்டும் நபர்கள், ஒரு கோடி பேர் உள்ளனர். இவர்கள், ஆண்டுக்கு, பல லட்சம் ரூபாய், வருமான வரி செலுத்துகின்றனர். பிரதமரின் அழைப்பை ஏற்று இவர்கள், சிலிண்டர் மானியத்தை விட்டு கொடுத்தால், அதை பின்பற்றி, பலரும் மானியத்தை திரும்ப ஒப்படைக்க வாய்ப்புள்ளது. அப்படி செய்தால், மத்திய அரசின் மானியச் சுமை பெருமளவு குறையும்.
முதல் ஐந்து இடம்:
மாநிலம் - மானியத்தை ஒப்படைத்தவர் (லட்சத்தில்)
மஹாராஷ்டிரா - 6.36
உ.பி., - 4.36
தமிழகம் - 2.54
ராஜஸ்தான் - 2.51
கர்நாடகா - 2.32
No comments:
Post a Comment