கலங்கரை விளக்கங்களைக் காண இணையதளத்தில் நுழைவுச் சீட்டைப் பெறும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என கப்பல் போக்குவரத்து துறையின் கூடுதல் செயலர் அலோக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக்கும் வகையில், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு, ஆலோசனை நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் எச்.எஸ்.மீனா பேசியது:
தமிழகத்தைப் பொருத்தவரை 7 கலங்கரை விளக்கங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1,766 கி.மீ. தொலைவு கடற்கரை உள்ளது. ஆனால், கலங்கரை விளக்கங்களை பார்வையிட செல்பவர்கள் நுழைவுச் சீட்டைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். இதனைக் குறைப்பதற்காக அனைத்து கலங்கரை விளக்கங்களுக்கும் ஒரே நுழைவுச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து, கப்பல் போக்குவரத்துறையின் கூடுதல் செயலாளர் அலோக் ஸ்ரீவஸ்தவா பேசியது:
கலங்கரை விளக்கங்கள் 100 முதல் 150 ஆண்டுகள் பழமையானவை. அவற்றின் கட்டடக் கலை அந்தந்தப் பகுதிகளின் கட்டடக் கலையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்காக சுற்றுலாத் துறை, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
அனைத்து கலங்கரை விளக்கங்களுக்கும் ஒரே நுழைவுச் சீட்டு என்பது சாத்தியமற்றது. ஆனாலும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல் இருப்பதற்கு இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டைப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக்க முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக விசாகப்பட்டினம், கொச்சி, சென்னை ஆகிய இடங்களில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சென்னையில் மட்டும் 120 முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து வரும் 29-ஆம் தேதி மும்பையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது என்றார்.
சுற்றுலாத் தலங்களாகும் மாமல்லபுரம், பழவேற்காடு கலங்கரை விளக்கங்கள்
நாட்டில் உள்ள 7,517 கி.மீ. தொலைவுள்ள கடற்கரையில் 189 கலங்கரை விளக்கங்கள் அமைந்துள்ளன. இதில், சென்னை, மாமல்லபுரம், கேரளத்தில் உள்ள ஆலப்புழை, கண்ணனூர் ஆகிய 4 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலமாக கலங்கரை விளக்கங்கள் இயக்குநரகம் மேம்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸா, குஜராத், மகாராஷ்டிரம், கோவா, மேற்கு வங்கம், லட்சத்தீவு, அந்தமான்- நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் உள்ள 78 கலங்கரை விளக்கங்களை செய்து சுற்றுலாத் தலங்களாக மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இதில், தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம், கீழக்கரை, கோடியக்கரை, மணப்பாடு, பழவேற்காடு, பரங்கிப்பேட்டை, கன்னியாகுமரியில் உள்ள முட்டம், புதுச்சேரி ஆகிய 8 இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றைச் சுற்றி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக உணவகம், தங்கும் விடுதிகள், பார்வையாளர்கள் கூடம், அருங்காட்சியகம், கப்பல் துறை அருங்காட்சியகம், சாகச விளையாட்டுகள், லேசர் காட்சிகள் உள்ளிட்ட அம்சங்களை அமைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment