அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், பணிநியமனம் செய்யப்பட்ட, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாதா மாதம் சம்பளம் பெறுவதில், தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான கல்வித்தரத்தை மேம்படுத்த, அனைவருக்கும் கல்வி திட்டமும், ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கான தரத்தை மேம்படுத்த, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டமும் செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசின் கூட்டு நிதி ஒதுக்கீட்டில், செயல்படும் இத்திட்டத்தில், புதிய பள்ளிகள் ஏற்படுத்துதல், ஆசிரியர் நியமனம், பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், 7,979 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 6,000த்துகும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்தில், இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதால், பணிநீட்டிப்பு ஆணை வழங்கப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, ஒராண்டுக்கு அல்லது, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆறு மாதங்களாக, ஒரு மாதத்துக்கு மட்டுமே பணிநியமன ஆணை வெளியிடப்படுகிறது. அதுவும் தாமதமாக வெளியிடப்படுவதால், ஒவ்வொரு மாதமும், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சம்பளம் பெறுவதில், 15 நாள் வரை தாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன் கூறியதாவது:
கடந்த, ஆறு மாதமாக, ஒவ்வொரு மாதத்துக்கும், பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படுகிறது. அதுவும் தாமதமாக வழங்கப்படுவதால், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பத்து நாள் முதல், 15 நாள் வரை, சம்பளத்தை தாமதமாக பெறும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்காவது பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும்.
மற்ற ஆசிரியர்கள், மாதத்தின் முதல் தேதியிலேயே சம்பளம் பெறும் போது, திட்ட நிதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளத்தில் தாமதம் செய்வது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment