சி.பி.எஸ்.சி., யின் அனைத்து புத்தகங்களும் இன்டர்நெட்டில் இலவசமாக வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: கேந்திரீய வித்யாலயப் பள்ளிகளில் "சாலா தர்ப்பண்', "சாராம்ஷ்' ஆகிய இரு புதிய சேவைகளை மத்திய அரசு துவக்கவிருக்கிறது. இதில் சாலா தர்ப்பண் திட்டத்தில் மாணவர்களின் வருகைப் பதிவேடு எஸ்.எம்.எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சாராம்ஷ் திட்டத்தில், தங்கள் பிள்ளைகள் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்களை, இந்தியாவின் பிற பகுதிகளிலுள்ள மாணவர்களின் மதிப்பெண்களுடன், ஒப்பிட்டுப் பார்க்கம் வசதி ஏற்படுத்தப்படும்.
என்.சி.இ.ஆர்.டி., யின்(தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் கவுன்சிலின்) தொடக்கக் கல்வி, தொழிற்கல்வி புத்தகங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு இ-புத்தகமாக (மின்னணுப் புத்தகம்) இலவசமாக இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. இதைப்போல, சி.பி.எஸ்.சி., யின் அனைத்து புத்தகங்களும், விரைவில் இன்டர்நெட்டில் இலவசமாக வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், பல்வேறு துறை சார்ந்த நபர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடும் பால சபாகளை நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment