நாளை மறுநாள் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 43 ஆயிரம் மையங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 19, 2016

நாளை மறுநாள் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 43 ஆயிரம் மையங்கள்

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 43 ஆயிரத்து 51 மையங்கள் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 21-02-2016 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு மருத்துவமனைகள்/அங்கன்வாடி மையங்கள்/ சத்துணவு மையங்கள்/ பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதல் தவணை 17-1-2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடுக்கப்பட்டது. இரண்டாம் தவணை 21-2-2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

21-2-2016 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார்  2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள். ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

தமிழ் நாடு போலியோ இல்லாத 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முதலமைச்சரின் சீரிய முயற்சியின் விளைவாக, போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ் நாடு பல ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment