முதல்வர் பிறந்த நாளுக்காக அரசு பள்ளிக்கு கட்டாய விடுமுறை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 24, 2016

முதல்வர் பிறந்த நாளுக்காக அரசு பள்ளிக்கு கட்டாய விடுமுறை!

முதல்வர் பிறந்த நாள் மருத்துவ முகாம் நடத்துவதற்காக, அரசு நடுநிலை பள்ளிக்கு கட்டாய விடுமுறை அளித்து, பள்ளி வளாகத்தை பயன்படுத்திய மாநகராட்சியின் அத்துமீறலால் பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்தனர்.

சென்னை மாநகராட்சியின், 15 மண்டலங்களில், முதல்வர் பிறந்த நாள் விழாவையொட்டி, நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாதவரம் மண்டலத்தில், 22வது வார்டு புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், நேற்று முகாம் நடத்தப்பட்டது. அதற்காக, அந்த பள்ளிக்கு கட்டாய விடுமுறை விடப்பட்டது. ஏற்கனவே, கடந்தாண்டு இறுதியில் நீடித்த பலத்த மழையால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, 1 மாத விடுமுறையும், அதையடுத்து, பொங்கல் விடுமுறையும் விடப்பட்டது.

குழப்பமான விளக்கம்:

ஆண்டுத் தேர்வுகள் நெருங்கிய நிலையில், வார விடுமுறை நாளான சனி கிழமையன்று பள்ளி கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுதவிர அரசு பள்ளி வளாகங்களில் நடக்கும், அரசின் இலவச பொருட்கள் வழங்கும் பணி மற்றும் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல் முகாம் ஆகியவற்றால், பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில், நேற்றைய மருத்துவ முகாமிற்காக, புழல் நடுநிலைப்பள்ளிக்கும் கட்டாய விடுமுறை விடப்பட்டது. மற்ற பகுதிகளில் பள்ளிகள் இயங்கும் நிலையில், இந்த பள்ளிக்கு மட்டும் எப்படி விடுமுறை விடப்பட்டது என பெற்றோர் குழம்பினர்.

முதல்வரின் மருத்துவ முகாமிற்காக, விடுமுறை விடப்பட்டது; மற்றொரு வார விடுமுறை நாளில் பள்ளி செயல்படும் என, பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெற்றுதான் பள்ளி வளாகம் பயன்படுத்தப்பட்டது என்றனர்.பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரியிடம் விசாரித்த போது, பதில் அளிக்க மறுத்து, தொடக்க கல்வி அதிகாரிகளை கேளுங்கள் என்று நழுவினர்.

தொடக்க கல்வி அதிகாரிகள் கூறுகையில், முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சி என்பதால், எங்களால் மறுக்க முடியவில்லை என்றனர். மருத்துவ முகாமை, மாநகராட்சியின் சமுதாயகூடம் அல்லது தனியார் திருமண மண்டபம் ஆகியவற்றில் நடத்தியிருக்கலாம். ஆனால், ஊருக்கு இளைத்தவன் பிள்ளை யார் கோவில் ஆண்டி என்பது போல், அரசு பள்ளி களில் அத்துமீறுவது தொடர்கிறது.

பெயரளவில் தான்...

மேலும், மருத்துவ முகாம் குறித்து, பகுதி வாசிகளுக்கும் சரியான தகவல் இல்லை. அதனால், மருத்துவ முகாமில் போதிய மருத்துவக்குழுவினர் இருந்தும், பயனாளிகளின் வருகை பெயரளவில்தான் இருந்தது.புழல் மருத்துவ முகாமில் மொத்தம், 1,696 பேர், அம்பத்துார் மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமில் 795 பேர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றனர்.

No comments:

Post a Comment