ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 25, 2016

ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா?

ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 2–வது ஆண்டாக அவர் தாக்கல் செய்யும் ரெயில்வே பட்ஜெட் இதுவாகும்.இதில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் கட்டணம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறைந்து வரும் வருமானம் மற்றும் ரெயில்வே இலாகாவின் பல்வேறு திட்டங்களுக்கான நிதித் தேவை ஆகியவற்றுக்காக ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதேநேரம் ரெயில்வே இலாகாவின் ஒரு பிரிவினர் கட்டண உயர்வு இந்த நேரத்தில் தேவை இல்லை என்று கருதுகின்றனர்.கடும் நிதிப்பற்றாக்குறையை ரெயில்வே நிர்வாகம் கொண்டு உள்ளபோதிலும் விரைவில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் டீசல் விலை சரிவு ஆகியவை காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் கட்டணம் உயர்வு பற்றிய அறிவிப்பை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வெளியிட மாட்டார் என்றே அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வருமானம் குறைந்தது

ரெயில் பெட்டிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துவது, பெட்டிகளின் உள் அலங்காரத்தை அதிக கட்டணம் கொண்ட ரெயில்களில் கூடுதலாக்குவது போன்றவற்றுக்கும் நிதி தேவைப்படுகிறது.தற்போது சரக்கு மற்றும் பயணிகள் ரெயில் கட்டணத்தில் மட்டும் மானியமாக ரூ.30 ஆயிரம் கோடியை ரெயில்வே இலாகா செலவிடுகிறது. 7–வது சம்பள கமிஷன் பரிந்துரையால் கூடுதலாக ரூ.32 ஆயிரம் கோடி ரெயில்வே இலாகாவுக்கு தேவைப்படுகிறது.கடந்த ஏப்ரல்–ஜனவரி இடையேயான கால கட்டத்தில் வருமான இலக்காக ரூ.1,41,416 கோடி நிர்ணயிக்கப்பட்டதில், ரூ.1,36,079 கோடியை மட்டுமே ரெயில்வே இலாகா வருவாயாக ஈட்டி இருக்கிறது. எதிர்பார்ப்பை விட வருமானம் குறைந்ததால் ரெயில்வேயின் நிதி நிலைமை சமச்சீரற்று காணப்படுகிறது.கூடுதல் நிதி தேவை

அதேநேரம் ரெயில்வே இலாகாவை மேம்படுத்துவதற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், ரெயில்வேயின் புதிய திட்டங்களுக்காக ரூ.1,25,000 கோடி நிதி தேவைப்படுகிறது.குறிப்பாக பாதுகாப்பு மேம்பாடு, மின்மயமாக்கல், இரட்டைப் பாதை, போக்குவரத்து நெரிசல் முட்டுக்கட்டைகளை நீக்க ரெயில்வே யார்டுகளை நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த நிதி தேவைப்படுகிறது. இத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இலாகாவிற்கு வெளியில் இருந்து நிதியைப் பெறவேண்டிய நிலையில் ரெயில்வே உள்ளது. இந்த நிதி ஆதாரத்தை பெறுவது தொடர்பாக சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டில் விளக்கமாக அறிவிப்பார் என்றும் தெரிகிறது.புறநகர் ‘ஏசி’ ரெயில்கள்2–வது ஆண்டாக இந்த ஆண்டும் ரெயில்வே பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் விடுவது பற்றிய அறிவிப்பு எதுவும் இருக்காது என்றே கருதப்படுகிறது. எனினும், உள்ளூர் தேவைக்கு ஏற்ப புதிய ரெயில் சேவையை தேர்ந்தெடுத்த பகுதிகளில் விடலாம் என்ற யோசனையும் உள்ளது.அதேநேரம் புறநகர் ரெயில் சேவையில், ‘ஏசி’ வசதி கொண்ட மின்சார ரெயில்கள் மும்பையில் அறிமுகம் செய்வது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம். இதேபோல் மற்ற நகரங்களுக்கும் இந்த ஏசி ரெயில் திட்டம் விரிவு படுத்தப்படலாம். இந்த ரெயிலின் கட்டணம் சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அதிவேக சரக்கு ரெயில்களை இயக்குவது, மின்சாரம் மற்றும் டீசல் ஆகியவற்றுடன் இயக்கப்படும் ரெயில் என்ஜின்கள் பற்றிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.பசுமை நிலையங்கள்

ரெயில்வேயில் தூய்மை நிலையை பேணுவதற்கு என தனி வரி விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.இதேபோல் நாடு முழுவதும் 400 ரெயில் நிலையங்களை, பசுமை ரெயில் நிலையங்களாக மாற்றுவதற்கு தனியார் பங்களிப்புடன் இணைந்து செயல்படுத்துவது பற்றிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம்.இந்த ரெயில் நிலையங்களில் சூரிய சக்தி, நீர் சுத்திகரிப்பு, கழிவுகளை எரிசக்தியாக்குதல், எல்.இ.டி. மின்விளக்குகள் பயன்பாடு ஆகியவற்றுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழகத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெயில்வே திட்டங்கள் பல நிலுவையில் உள்ளன. இதை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புடன் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடம் உள்ளது.உயர்த்தாததால் குறைந்தது

நேற்று பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சுரேஷ் பிரபு, ரெயில் கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்படாததால் தொடர்ச்சியாக ரெயில்வே இலாகாவின் வருமானம் குறைந்து போனது. மற்றவகை போக்குவரத்து வருமானத்தை விட இது மிகக் குறைவாகும் என்று தெரிவித்தார்.ரெயில்வேயில் தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் ஆகும் என்று கூறிய ரெயில்வே மந்திரி, அதே நேரம் ரெயிலில் பயணிக்கும் பொதுமக்களின் நலன்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment