தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்ந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 2-ஆம் கட்ட கலந்தாய்வில் 227 இடங்கள் நிரம்பியுள்ளன.வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
மொத்தமுள்ள 2,260 இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக்கு 5,757 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2,122 பேர் பங்கேற்றனர். இதில், 2,055 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்திருந்தனர். கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற தொழிற்கல்விகான கலந்தாய்வில் 40 இடங்கள் நிரம்பின.முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் தனியார் கல்லூரிகளில் 142 இடங்களும், பல்கலைக்கழகத்தில் எஸ்.டி.பிரிவினருக்கான 8 இடங்கள் உள்ளிட்ட 15 இடங்களும் காலியாக இருந்தன. சேர்க்கைக்கான உத்தரவைப் பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேருவதற்கு ஜூலை16-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற 2 ஆயிரம் மாணவர்களில் சுமார் 800 பேர் கல்லூரிகளில் சேரவில்லை. இந்த ஆண்டு முதல் முறையாக அதிகப்படியான மாணவர்கள் வேளாண் படிப்புகளில் இருந்து விலகி வேறு படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.
வேளாண் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல், சுமார் 320 மாணவ, மாணவிகள் கால்நடை மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், பல மாணவர்கள் பொறியியல் படிக்கவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிக்கவும் சென்றுவிட்டனர். இதனால், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில்697 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்ததில் 229 பேர் பங்கேற்றனர். இதில் 227 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர்.காலியிடங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக இருப்பதால் இரண்டாம் கட்ட கலந்தாய்வு இந்த வாரம் முழுவதும் நடைபெறும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment