மத்திய அரசின் இலவச ஆன்லைன் படிப்புகள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 28, 2016

மத்திய அரசின் இலவச ஆன்லைன் படிப்புகள்!

‘ஸ்வயம்’ எனும் கற்க துடிக்கும் இளம் மாணவர்களுக்கான இணைய வழி கல்வித் திட்டம், கடந்த 2014ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் உதவியுடன் இலவச ஆன்லைன் கல்வி சேவை ஆகஸ்ட்  15ம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

‘ஸ்வயம்’ எதற்காக?

ஏற்கனவே, இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.,) மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.,) ஆகியவை இணைந்து ‘எம்.ஒ.ஒ.சி’ (மேசிவ் ஓப்பன் ஆன்லைன் கோர்ஸ்) முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆன்லைன் படிப்புகளை ‘என்.பி.டி.இ.எல்.,’ திட்டத்தின் வாயிலாக வழங்கி வருகின்றன.

இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த படிப்புகளை ஆன்லைன் மூலம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதுதான் ‘ஸ்வயம்’  திட்டம். இதன்படி, வேதியியல், பொருளாதாரம், தடயவியல், வணிகம், சமஸ்கிருதம், தகவல் தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 63 வகையான படிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதன்மூலம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தாங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து, இணையதளம் மூலம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை பெற முடியும். இப்படிப்புகளை கற்பதற்கு எந்த கட்டணமும் இல்லை என்றாலும், சிறப்பு சான்றிதழ் பெற விரும்புபவர்கள் மட்டும், தேர்வுக்கான குறைந்த அளவிலான கட்டணத்தை செலுத்தி தேர்வு எழுத வேண்டும்.

படிப்புகளின் முழு விவரங்களை http://www.ugc.ac.in/ugc_notices.aspx என்ற யு.ஜி.சி.,யின் இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment