ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை, ' உலக பார்வை தினம்' ஆக அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவனத்தால் (World Health Organization) அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தினத்தையொட்டி, சர்வதேச அளவில் விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பார்வை குறைப்பாட்டைத் தவிர்க்க உலக சுகாதார மையத்தின் 'விஷன் 2020: ரைட் டு சைட்' என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக முக்கியத்துவம் பெறும் இந்த தினத்தின் நோக்கமே 'பார்வையற்றோர் மற்றும் பார்வைத்திறனில் குறைபாடு உள்ளோர்' மீது உலக மக்களது கவனத்தைக் கொண்டு செல்வதுதான்.
உலக சுகாதார அமைப்பு கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் மக்களிடம் சர்வே எடுத்துள்ளது. அதன்படி, உலக அளவில் கிட்டத்தட்ட 285 மில்லியன் மக்கள் பார்வைத்திறனில் பிரச்னை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதில் 246 மில்லியன் மக்கள் குறைந்த பார்வைத் திறன் உள்ளவர்களாகவும், 39 மில்லியன் மக்கள் முழுவதுமாகவே பார்வையற்றவர்களாக உள்ளனராம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வேக்களைப் பொறுத்தவரை, கடந்த இருபது ஆண்டுகளில் பார்வைத்திறன் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவிக்கின்றது.
தற்பொழுது, பார்வை குறைபாடு உள்ளவர்களில் 80 சதவிகிதத்தினர் குணப்படுத்தக்கூடிய நிலையில்தான் உள்ளனர்.
பார்வைக் குறைபாடு உள்ளவர்களில் 82 சதவிகிதத்தினர் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், பதினைந்து வயதிற்குட்பட்ட சிறுவர் - சிறுமியர் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு உள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.
No comments:
Post a Comment