வடகிழக்கு பருவமழை 20-ந் தேதி தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 10, 2016

வடகிழக்கு பருவமழை 20-ந் தேதி தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை 20-ந் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை காலம் பொதுவாக தீபகற்பத்தின் தென் கோடியில் மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் மாதம் தொடக்கத்திலோ தொடங்கி 3 மாதங்களுக்கு மழையை கொடுக்கும். இது தான் இந்தியாவின் பெரும் பகுதிக்கு கணிசமான மழையை தரக்கூடியது.

அந்தவகையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கியது. மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாகவே இருக்கும். பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 32 செ.மீ. ஆகும். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் 25.5 செ.மீ. மழை அளவு தான் பெற்று இருக்கிறது. இது இயல்பான மழை அளவை விட 20 சதவீதம் குறைவு.

20-ந் தேதி தொடங்க வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை காலம் விலக்கப்படுவதற்குள் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிடும். அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் 20-ந் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. தற்போது அரியானா, பஞ்சாப்பை கடந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து ராஜஸ்தான் மாநிலம் அருகே பின்வாங்குகிறது. தென்மேற்கு பருவமழை முடிவில், மத்திய இந்தியாவில் உயர் அழுத்த காற்று சுழற்சி உருவாகி வங்க கடல் பகுதியில் திரளான மேகக்கூட்டங்களுடன் வந்து மழையை கொடுக்கும். அதுவே வடகிழக்கு பருவமழை தொடக்கம் ஆகும்.

இன்னும் 10 நாட்களில் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து, 20-ந் தேதி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் அதிகளவு மழை பெறும். இந்த மழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 44 செ.மீ. இந்த ஆண்டு இயல்பான மழை அளவில் தமிழகம் 92 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிக மழை பெய்யுமா?

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ந் தேதி தொடங்கியது. யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ந் தேதி கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து வட கடலோர தமிழகத்தில் கனமழை இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மீண்டும் மழை கொட்டியது.

இதுபோல் அதிகளவு மழை பெய்ததால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் இயல்பான அளவை விட 53 சதவீதம் (67 செ.மீ.) அதிகமாக மழையை பெற்றது.

இந்த ஆண்டும் அதேபோல் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அதை இப்போது கணித்து சொல்ல முடியாது. இயல்பான அளவை எட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சாதகமான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வுநிலை எதுவும் உருவாகும் பட்சத்தில் இயல்பான அளவை விட அதிகமான மழையை எதிர்பார்க்கலாம்’ என்றனர்.

No comments:

Post a Comment