இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வட்டாரங்கள் கூறியதாவது:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பதவி வகித்தபோது, ஐஐஎம் வரைவு மசோதா உருவாக்கப்பட்டது.
அந்த மசோதாவில் நாட்டில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிடுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. அத்துடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகே ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற அம்சமும் இடம் பெற்றிருந்தது.
ஆனால், அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் அதிக தன்னாட்சி அதிகாரங்களை ஐஐஎம் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க அப்போதைய அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தற்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் பிரகாஷ் ஜாவடேகர், பிரதமர் அலுவலகத்தின் கோரிக்கையை ஏற்று சில திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட மசோதாவில், ஐஐஎம் நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் சென்று ஆய்வு மேற்கொள்ள வகை செய்யும் அம்சம் நீக்கப்பட்டது.
மேலும், ஐஐஎம் நிறுவனங்களுக்கு இயக்குநர்களை நியமிப்பதற்கான கூடுதல் அதிகாரம் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம், ஐஐஎம் நிறுவனங்கள் மீதான மத்திய அரசின் அதிகாரங்கள் தளர்த்தப்பட்டு அவற்றுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரங்கள வழங்கப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட புதிய மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
No comments:
Post a Comment