திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம்: கேரளாவுக்கு புது பெருமை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 9, 2016

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம்: கேரளாவுக்கு புது பெருமை

கிராமப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட, கேரளா தயாராகி வருகிறது.

கேரள மாநில அரசு சார்பில், கிராமப் பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் சுசித்வா திட்டத்தின் கீழ், 941 கிராமப் பஞ்சாயத்துகளில் மொத்தம், 1 லட்சத்து, 75 ஆயிரத்து, 84 கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது.

திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத, சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில், உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து இத்திட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதி, கிராமப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட உள்ளது.

முதல்கட்டமாக கிராமப் பகுதிகளும், பின்னர் நகர் புறங்களும் திறந்தவெளி கழிப்பிடமில்லாத சுகாதாரப் பகுதிகளாக அறிவிக்கப்படும். இதுகுறித்து திட்ட செயல் இயக்குனர் வாசுகி கூறியதாவது:

காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, திரிச்சூர், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய 6 மாவட்டங்கள், திறந்தவெளி கழிப்பிடமில்லாதவையாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. மாநிலம் முழுவதும் 843 கிராமங்களில், 1,54,764 கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டன. இத்திட்ட இலக்கில், 90 சதவீதத்தை எட்டியுள்ளோம்.

வரும் நவம்பர் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து, விழா நடத்தி, கிராமப் புறங்களில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக கேரளாவை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கழிப்பறைகளின் எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்தாமல், மக்கள் எளிதில் பயன்படுத்துவதற்கு வசதியாகவும், சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

இவ்வாறு வாசுகி தெரிவித்தார்.

No comments:

Post a Comment